/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி தொகுதியில் மீண்டும் பா.ம.க.,? விரக்தியில் அ.தி.மு.க.,வினர்
/
செஞ்சி தொகுதியில் மீண்டும் பா.ம.க.,? விரக்தியில் அ.தி.மு.க.,வினர்
செஞ்சி தொகுதியில் மீண்டும் பா.ம.க.,? விரக்தியில் அ.தி.மு.க.,வினர்
செஞ்சி தொகுதியில் மீண்டும் பா.ம.க.,? விரக்தியில் அ.தி.மு.க.,வினர்
ADDED : மார் 10, 2026 04:49 AM

செஞ்சி தொகுதியில் அ.தி.மு.க., கூட்டணி சார்பில் மீண்டும் பா.ம.க., போட்டியிட வாய்ப்பு வழங்கி இருப்பதாக வெளியாகி வரும் தகவல்கள் அ.தி.மு.க.,வினரை விரக்தியடையச் செய்துள்ளது.
செஞ்சி, மேல்மலையனுார் ஒன்றியங்கள், தொகுதி சீரமைப்பிற்கு முன் மேல்மலையனுார் தொகுதியாக இருந்தது. தொகுதி சீரமைப்பிற்கு முன் நடந்த 2001ம் ஆண்டு தேர்தலில் இந்த தொகுதியில் அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தமிழ்மொழி ராஜதத்தன் வெற்றி பெற்றார். சீரமைப்பிற்குபின் இந்த இரண்டு ஒன்றியங்களையும் ஒன்றிணைத்து செஞ்சி தொகுதியாக மாற்றப்பட்டது.
அதன் பின் 2006ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க.,வும், தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் போட்டியிட்டு பா.ம.க., வெற்றி பெற்றது. 2011ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.கவும்., தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும் போட்டியிட்டு பா.ம.க., வெற்றி பெற்றது. 2016ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., நேரடியாக போட்டியிட்டு, தி.மு.க., வெற்றி பெற்றது. 2021ம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வும், தி.மு.க.,வும் போட்டியிட்டு, தி.மு.க., வெற்றி பெற்றது. நான்கு தேர்தல்களில் தொடர்ந்து அ.தி.மு.க., கூட்டணி தோல்வியை சந்தித்தது.
2021ம் ஆண்டு அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க.,வுக்கு சீட் ஒதுக்கியதால் தான் தோல்வியடைந்தது என அ.தி.மு.க.,வினர் கூறி வந்தனர். எனவே செஞ்சி தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்காமல் அ.தி.மு.க.,வுக்கு ஒதுக்கி தர வேண்டும் என மாவட்ட செயலாளர் சண்முகத்திடம் கேட்டு வந்தனர். அவரும், இந்த முறை அ.தி.மு.க.,வுக்கு சீட் என உறுதியளித்திருந்தார்.
செஞ்சி தொகுதியில் போட்டியிட மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரித்திவிராஜ், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் வேலவன், முன்னாள் எம்.எல்.ஏ., தமிழ்மொழி ராஜதத்தன் மகன் அருண்தத்தன் ஆகியோர் தயாராகி வந்தனர். இவர்களில் ஒருவருக்கு சீட் கிடைக்கும் என கட்சியினர் எதிர்பார்த்திருந்தனர்.
இந்நிலையில், செஞ்சி தொகுதியில் போட்டியிட பா.ம.க.,வுக்கு சீட் ஒதுக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. நேற்று முன்தினம் செஞ்சியில் பா.ம.க., முன்னாள் எம்.எல்.ஏ., கணேஷ்குமார் தனது கட்சி நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடத்தினார்.
அதில் கட்சியினர் தேர்தலுக்கு தயாராகும்படி கேட்டு கொண்டுள்ளார். இதனால் பா.ம.க.,வினர் சுறுசுறுப்படைந்து சுவர் விளம்பரம் எழுத இடம் பிடித்து வருகின்றனர்.
அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து அதிகார பூர்வமான தகவல் வெளியாகவில்லை என்றாலும், பா.ம.க,வினர் தொகுதியில் தேர்தல் வேலைகளை துவக்கி இருப்பது அ.தி.மு.க.,வினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதுடன், விரக்தியையும் ஏற்படுத்தி உள்ளது.
செலவு காரணமா? செஞ்சி தொகுதியில், தி.மு.க.,வுடன் எதிர்த்து போட்டியிடும் அளவிற்கு, செலவு செய்வதற்கு பண பலம் படைந்த வேட்பாளர் யாரும் இல்லை என அ.தி.மு.க., மாவட்ட தலைமை கருதுகிறது. அ.தி.மு.க., சார்பில் வேட்பாளர்களை களம் இறக்கினால் அவர்களுக்கு, கட்சியே அதிக செலவு செய்ய வேண்டிய நிலை வரும்.
அத்துடன் மயிலம் தொகுதியில் போட்டியிட உள்ள மாவட்ட செயலாளர் சண்முகம் செஞ்சி தொகுதியிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தேர்தல் செலவுக்கும் தலைமையிடம் இருந்து பணம் வராத நிலை ஏற்பட்டால் வீண் டென்ஷன் ஏற்படும் என்பதாலேயே தொகுதியை கூட்டணிக்கு ஒதுக்கி இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.

