/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மாதா கோவிலை அகற்ற எதிர்ப்பு கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு
/
மாதா கோவிலை அகற்ற எதிர்ப்பு கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு
மாதா கோவிலை அகற்ற எதிர்ப்பு கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு
மாதா கோவிலை அகற்ற எதிர்ப்பு கோட்டக்குப்பம் அருகே பரபரப்பு
ADDED : மார் 19, 2026 05:07 AM

கோட்டக்குப்பம்: கோட்டக்குப்பம் அருகே இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அமைக்கப்பட்ட மாதா கோயிலை அகற்ற பெண்கள் எதிர்ப்பு தெரிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோட்டக்குப்பம் அடுத்த கீழ்புத்துப்பட்டு பகுதியில் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இங்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள் சிறிய அளவில் மாதா கோவிலை கட்டி வழிபட்டனர்.
இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு அரசு சார்பில், 450 கான்கிரீட் வீடுகள் கட்டியது. கட்டுமான பணியின் போது முகாமின் மையப் பகுதியில் இருந்த மாதா கோவில் அகற்றப்பட்டது. அதையடுத்து, மாதா கோவில் தனியார் இடத்தில் அமைத்து வழிபட்டு வந்தனர்.
இந்நிலையில், தனியார் இடத்தில் உள்ள மாதா கோவிலை அகற்றக்கோரி இடத்தின் உரிமையாளர் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் கோவிலில் இருந்த சிலைகள் கொண்டுவரப்பட்டு முகாம் குடியிருப்பு பகுதியின் சாலை ஓரத்தில் வைத்து சிறிய கொட்டகை ஒன்றை திடீரென அமைத்தனர். அரசு அனுமதி இன்றிபொது இடத்தில் மாதா சிலைகள் வைக்கப்பட்டு கோவிலாக மாற்றப்பட்டதை அறிந்த கிராம நிர்வாக அதிகாரி மகேஸ்வரன், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.
தேர்தல் நன்னடத்தை விதிகள் நடைமுறையில் உள்ள நிலையில், இது போன்ற செயல்களை அனுமதிக்க முடியாது என வருவாய்த்துறை அதிகாரிகள் இலங்கை தமிழர்களிடம் தெரிவித்தனர்.
மேலும், அங்கு ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் பொருள்களை எடுத்து செல்லலோடு வாகனம் கொண்டுவரப்பட்டது.
அப்போது கோட்டக்குப்பம் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையிலான போலீசார் இலங்கை தமிழர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் சிலைகளை அகற்ற பெண்கள் மறுப்பு தெரிவித்து மாதா சிலைகளை அகற்ற விடாமல் முற்றுகையிட்டனர். 5 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், திடீர் மாதா கோவிலை அகற்ற முடியாமல் போலீஸ் மற்றும் வருவாய் துறையினர் திணறினர்.
பின் போலீசாரின் பாதுகாப்புடன் சிலை அகற்றப்பட்டு முகாமில் உள்ள வருவாய்துறை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

