/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆச்சரியத்தில் உடன் பிறப்புகள் இழந்த பதவியை பெற கட்சியினருடன் நெருக்கம் காட்டும் 'மாஜி' அப்படி இருந்தவர்... இப்படி மாறிட்டாரே...
/
ஆச்சரியத்தில் உடன் பிறப்புகள் இழந்த பதவியை பெற கட்சியினருடன் நெருக்கம் காட்டும் 'மாஜி' அப்படி இருந்தவர்... இப்படி மாறிட்டாரே...
ஆச்சரியத்தில் உடன் பிறப்புகள் இழந்த பதவியை பெற கட்சியினருடன் நெருக்கம் காட்டும் 'மாஜி' அப்படி இருந்தவர்... இப்படி மாறிட்டாரே...
ஆச்சரியத்தில் உடன் பிறப்புகள் இழந்த பதவியை பெற கட்சியினருடன் நெருக்கம் காட்டும் 'மாஜி' அப்படி இருந்தவர்... இப்படி மாறிட்டாரே...
ADDED : ஆக 26, 2025 06:34 AM

விழுப்புரம் ஒருங்கிணைந்த தி.மு.க., மாவட்ட செயலாளராக இருந்த பொன்முடி, அமைச்சராகவும், துணை பொதுச்செயலராகவும் இருந்தார். இரண்டாம் கட்ட தலைவராக கட்சி தலைமைக்கு நெருக்கமாக இருந்த அவர், முறைகேடு வழக்குகளில் சிக்கியதால் சறுக்கல்களை சந்தித்தார்.
மேலும், ஓ.சி., பயணம் என்ற வழக்கமான கிண்டல் பேச்சு, சைவம், வைணவம் குறித்த சர்ச்சை பேச்சால், கடும் விமர்சனம் எழுந்து கட்சிக்கும் அவப்பெயர் ஏற்பட்டதால், அவரது அமைச்சர் பதவியும், கட்சி பதவியும் பறிக்கப்பட்டது.
இதற்கிடையே மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு மஸ்தான், கவுதம சிகாமணி, லட்சுமணன் ஆகியோருக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி தீவிரமாக பணியாற்றுகின்றனர். பொறுப்பு அமைச்சராக பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டு கவனிப்பதால், இறங்கு முகம் தொடர்கிறது.
பதவிகள் பறிக்கப்பட்டு ஓராண்டாக உள்ள நிலையில், மீண்டும் இழந்த பதவியை பெறுவதற்கு 'மாஜி' அமைச்சர் பொன்முடி தீவிரம் காட்டி வருகிறார். அமைச்சர், எம்.எல்.ஏ.,வாக இருந்தபோது கட்சியினர், உறவினர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் செல்லாதவர், தற்போது, நிர்வாகிகள், தொண்டர்களின் சுப நிகழ்ச்சிகளுக்கு செல்கிறார்.
பள்ளி, கல்லுாரி விழாக்கள், விளையாட்டு போட்டிகள் என பல்வேறு நிகழ்வுகளுக்கு நேரில் சென்று வியப்பை ஏற்படுத்தி வருகிறார். கட்சியினர் நிகழ்வுகளில் தீவிரமாக தனது மகனுடன் பங்கேற்கிறார்.
ஏற்கனவே, விழுப்புரம் மாவட்ட செயலரான லட்சுமணன் எம்.எல்.ஏ., தினசரி ஏராளமான சுப, துக்க நிகழ்வுகளில் தீவிரமாக பங்கேற்பதோடு, கட்சியினருக்கு பல பதவிகளையும் வழங்கி, தாராளமாக செலவிட்டு நெருக்கம் காட்டுவதால், கட்சியினர் ஆர்வத்தோடு திரள்கின்றனர். ஆரம்பத்தில் இதனை விமர்சித்த பொன்முடி தரப்பு, தற்போது அதே பாணியை பின்பற்றி கட்சி நிர்வாகிகளிடம் நெருக்கம் காட்டி வருகிறார்.
கடந்த சில மாதங்களுக்கு முன், பொன்முடிக்கு மீண்டும் மாநில பதவி வர இருப்பதாக நம்பிக்கையோடு அவரது ஆதரவாளர்கள் கூறிவந்தனர். ஆனால், எவ்வித அறிவிப்பும் வரவில்லை.
இதனால், மீண்டும் பதவியை பெற பொன்முடி தரப்பு தீவிரம் காட்டி வருகிறது. குடும்பத்தோடு, முதல்வர் வீட்டிற்கும் சென்று சந்தித்து வந்துள்ளனர்.
கடந்த வாரம் பொன்முடி தனது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர். எப்போதும் இல்லாத வகையில், விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் விழாபோல் நடத்தி வாழ்த்துக்களை பெற்றார்.
அவர் சென்னையிலிருந்து வரும் வழியில் விழுப்புரம், விக்கிரவாண்டியில் ஆதரவாளர்கள் வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரத்தில் நடந்த நிகழ்வில் அவரது ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து பரிசளித்து விழா போல் கொண்டாடினர். சீர்வரிசை ஊர்வலத்துடன் வந்தும் வாழ்த்து தெரிவித்தனர்.
கடந்த காலங்களில் இதனையெல்லாம் விரும்பாத பொன்முடி, தனது வீட்டில் இருப்பார், வாழ்த்து சொல்ல முக்கிய நிர்வாகிகள் மட்டும் வந்து செல்வார்கள். ஆனால், இந்தமுறை அறிவாலயத்தில் கட்சியினருக்கு மதிய விருந்து வழங்கி தடபுடலாக கொண்டாடினார்.
இழந்த செல்வாக்கை தக்க வைப்பதற்கும், கட்சிப் பதவியை மீண்டும் பெறவே இந்த தீவிர கொண்டாட்டம் என அக்கட்சியினர் கூறுகின்றனர். குடும்பத்தோடு சென்னைக்கு சென்று, முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்று, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
தலைமைக்கு நெருக்கம் ஏற்பட்டுள்ளதால், மீண்டும் மாநில பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொன்முடி தரப்பும், அவரது ஆதரவாளர்களும் ஆர்வத்தில் உள்ளனர்.