/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
தி.மு.க.,விற்கு ஆதரவு கிடையாது தமிழரசன் திட்டவட்டம்
/
தி.மு.க.,விற்கு ஆதரவு கிடையாது தமிழரசன் திட்டவட்டம்
தி.மு.க.,விற்கு ஆதரவு கிடையாது தமிழரசன் திட்டவட்டம்
தி.மு.க.,விற்கு ஆதரவு கிடையாது தமிழரசன் திட்டவட்டம்
ADDED : ஆக 24, 2025 03:29 AM

விழுப்புரம்:வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,விற்கு எங்களின் ஆதரவு கிடையாது என இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் தமிழரசன் தெரிவித்துள்ளார்.
அவர் விழுப்புரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 9 மாவட்டங்களை தவிர பல மாவட்ட உள்ளாட்சி பதவிக்கான காலம் முடிந்துள்ளது. இதற்கான தேர்தல் எப்போது நடத்த போகின்றனர் என்பது பற்றி தமிழக அரசு தெளிவான அறிவிப்பு வெளியிடவில்லை.
கடந்த உள்ளாட்சி தேர்தலில், அரசு மிகப்பெரிய சமூக கொடுமையை தலித் மக்களுக்கு ஏற்படுத்தியது.
துப்புரவு தொழிலாளி இறந்தால் அரசு பணத்தை நிவாரணமாக வழங்குகிறது. உயிரின் விலை பணம் மட்டும் தானா என்பதை கூற வேண்டும்.
தாழ்த்தப்பட்டவர் எத்தனை கோவிலில் அர்ச்சகராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க., கூறியபடி துப்புரவு பணியாளர்களை நிரந்தரம் செய்யவில்லை. சாதி ஆணவ படுகொலைக்கு தனிசட்டத்தையும் அரசு கொண்டு வரவில்லை.
இதற்கெல்லாம் மக்கள் தான் தீர்வு கூறுவர். த.வெ.க., விஜய், ஆங்கிலத்தில் முதல்வரை 'அங்கிள்' என பொதுவெளி மேடையில் கூறியது பெரிய தவறில்லை. சட்டசபையில் கூறியிருந்தால் தான் தவறு. மேடை மரபின்றி பேசியுள்ளார்.
தேர்தல் நெருங்கும் போது நாங்கள் எந்த அரசியல் கட்சியோடு கூட்டணி என்பது பற்றி கூறுவோம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான அரசியல் பொருளாதார வளர்ச்சிக்கு யார் முன் வருகிறார்களோ, தி.மு.க.,வை தவிர்த்து அவர்களோடு கூட்டணி வைப்போம்.
அ.தி.மு.க., பா.ஜ., கூட்டணி பற்றி தெளிவான முடிவில்லை. தி.மு.க., அரசு ஏமாற்றம் அளிப்பதால் எங்களின் ஆதரவு அவர்களுக்கு கிடையாது.
பா.ம.க., ராமதாஸ் - அன்புமணி இடையே நடக்கும் கருத்து மோதல் பிரச்னை அரசியல் கிடையாது. குடும்ப பிரச்னை. அவர்கள் இருவரும் சந்தித்து ஒருமணி நேரம் பேசினால் தீர்த்து கொள்ளலாம்.
இவ்வாறு கூறினார்.
மாநில பொறுப்பாளர்கள் மங்காபிள்ளை, தன்ராஜ், மோகன், ரமேஷ்குமார், பொருளாளர் கவுரிசங்கர், மண்டல செயலாளர் குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.