ADDED : நவ 01, 2024 06:23 AM

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே நிதி நிறுவன ஊழியரிடம் நகை மற்றும் பணம் வழிப்பறி செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருக்கோவிலுாரில் உள்ள தனியார் வங்கியில் பணிபுரிந்து வரும் காணையை சேர்ந்த பிரான்சிஸ் மகன் ஸ்டீபன் ராஜ், 26; இவர் கடந்த 26ம் தேதி மாலை 4:00 மணியளவில் வங்கி வேலை தொடர்பாக மழவந்தாங்கல் கூட்ரோடு பகுதிக்கு பைக்கில் வந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் லிப்ட் கேட்டுள்ளார்.
அவரை ஏற்றிக்கொண்டு மழவந்தாங்கலுக்கு அருகில் வந்தபோது, பைக்கில் ஏற்றி வந்த நபர், ராஜியின் மொபைல் போனை பிடுங்கி மிரட்டியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு தனது இரண்டு நண்பர்களை வரவழைத்து, வங்கி ஊழியர் ஸடீபன் ராஜிடமிருந்த 1 சவரன் செயின், 2 கிராம் மோதிரம், ரூ. 85 ஆயிரம் ரொக்கம் மற்றும் ஜிபே மூலமாக 26 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை கத்தியைக் காட்டி மிரட்டி பிடுங்கிச் சென்றனர்.
இது குறித்து ஸ்டீபன் ராஜ் கொடுத்த புகாரில், கண்டாச்சிபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், மழவந்தாங்கல் கிராமத்தை் சேர்ந்த குமார் மகன் அஜித், 21; கதிர்வேல் மகன் சதீஷ் மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

