மத்திய அமைச்சருக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விளக்கம்
மத்திய அமைச்சருக்கு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து விளக்கம்
ADDED : செப் 02, 2026 07:23 PM

வானுார்: சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு வருகை புரிந்த, மத்திய அமைச்சருக்கு, வளர்ச்சி திட்டப்பணிகள் எடுத்துரைக்கப்பட்டது.
சர்வதேச நகரமான ஆரோவில் பகுதிக்கு நேற்று மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை மத்திய இணை அமைச்சர் சிங் பாகேல் வருகை புரிந்தார். அவருடன், புதுச்சேரி அமைச்சர் ராஜவேலு, எம்.எல்.ஏ., ஜான்குமார் ஆகியோர் உடன் வந்தனர்.
மத்திய அமைச்சரை, ஆரோவில் அறக்கட்டளையின் சிறப்பு செயல் அலுவலர் சீத்தாராமன், மூத்த ஆலோசகர் வேணுகோபால் ஆகியோர் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து, மத்திய இணை அமைச்சர், மாத்ரி மந்திர் பகுதியில் தியானத்தில் ஈடுப்பட்டார். அதன் பிறகு, மத்திய அமைச்சர் மற்றும் அவருடன் வந்த குழுவினர், ஆரோவில் சர்வதேச நகரத்தின் தற்போதைய முன்னேற்றம், மேம்பாட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிந்தனர். அவர்களுக்கு திட்டப்பணிகள் குறித்து அறக்கட்டளை நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
அப்போது, இந்திய அரசின் கல்வி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆரோவில் அறக்கட்டளை செயலரும், குஜராத் மாநில கூடுதல் தலைமைச் செயலாளருமான ஜெயந்தி ரவி தலைமையில் நடைபெற்று வரும் பல்வேறு முன்னெடுப்புகள் குறித்து அதிகாரிகள் விளக்கினர்.
இதில், மாத்ரி மந்திர் ஏரித் திட்டம் குறித்த விரிவான விளக்கக்காட்சி முக்கிய இடம் பிடித்தது. மேலும், ஆரோவில்லின் அடிப்படை நோக்கத்தை நனவாக்கும் வகையில், இங்கு தொடர்ந்து நடைபெற்று வரும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் மத்திய அமைச்சருக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
