/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் போராட்டம்
/
டாஸ்மாக் கடையை அகற்ற கிராம மக்கள் போராட்டம்
ADDED : பிப் 03, 2026 04:27 AM

விழுப்புரம்: விழுப்புரம் அடுத்த கக்கனுார், அரியலுார் திருக்கை, புதுப்பேட்டை, அத்தியூர் திருக்கை கிராம மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொதுமக்கள் கூறியதாவது:
விழுப்புரம் - திருவண்ணாமலை சாலையில் உள்ள கக்கனுார் கிராமம் அரியலுார் திருக்கை, அனுமந்தபுரம், புதுப்பேட்டை, அத்தியூர் திருக்கை உள்ளிட்ட கிராமங்களின் முக்கிய சந்திப்பாக உள்ளது.
அரியலுார் திருக்கை பஸ் நிறுத்தத்தில் இருந்து புதுப்பேட்டைக்கு செல்லும் சாலையில் குடியிருப்பு மத்தியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது டாஸ்மாக் கடைக்கு வரும் மது பிரியர்கள், அங்கேயே குடித்துவிட்டு சாலையில் அரைகுறை துணிகளுடன் விழுந்து கிடப்பதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் முகம் சுளிக்கின்றனர்.
மேலும், அப்பகுதியில் விபத்துக்கள் அதிகரித்து இறப்பு, உடல் உறுப்பு இழக்கும் நிலை நீடித்து வருகிறது. இது தொடர்பாக கக்கனுார் கிராம சபை கூட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்ற தீர்மானம் நிறைவேற்றி, கலெக்டரிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், வரும் சட்டசபை தேர்தலை நான்கு கிராம மக்கள் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதையடுத்து, இக்கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துவிட்டு, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

