/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கணவர் சாவில் சந்தேகம் மனைவி புகார் மனு
/
கணவர் சாவில் சந்தேகம் மனைவி புகார் மனு
ADDED : நவ 24, 2024 04:52 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் இறந்த கணவரின் சாவில் சந்தேகம் உள்ளதாக, தர்மபுரியைச் சேர்ந்த பெண், குடும்பத்தினருடன் எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார்.
தர்மபுரி மாவட்டம், கேத்துரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் மனைவி ரஞ்சிதா, 25; இவர், தனது கணவர், விழுப்புரத்தில் மர்மமான முறையில் இறந்தது குறித்து, நடவடிக்கை கோரி, விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் அளித்த புகார் மனு:
எனது கணவர் ராஜ்குமார்,34; ஜே.சி.பி., ஆப்பரேட்டராக இருந்தார். எங்கள் ஊரில் பிரபாகரன் என்பவர், ரயில்வே காண்ட்ராக்ட் பணிகளை எடுத்து, என் கணவர் உள்பட பலபேருக்கு வேலை வழங்கி வருகிறார்.
அதன்படி, விழுப்புரம் ரயில் நிலைய பராமரிப்பு பணிக்காக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, எனது கணவர் விழுப்புரம் வந்து தங்கி பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 18ம் தேதி, அவருடன் பணிபுரியும் மோகன், குமரேசன் ஆகியோர், மொபைல் பேனில் பேசினர். அப்போது எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை, மருத்துவமனையில் சேர்த்துள்ளோம் என தெரிவித்தனர்.
நான் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு வந்தபோதுதான், எனது கணவர் இறந்துவிட்டார் எனக்கூறி, என்னிடம் கையெழுத்து வாங்கி, பிரேத பரிசோதனை செய்யாமல், கணவர் உடலை ஒப்படைத்தனர்.
அந்த பதட்டத்தில், தனியாக என்ன செய்வதென்று தெரியாமல், கணவரின் உடலை ஆம்புலன்சில் ஊருக்கு கொண்டு சென்று, இறுதிச் சடங்கு செய்யப்பட்டது.
எனது கணவரின் உடலில், தலைப் பகுதியில் காயங்கள் உள்ளது. இதனால், அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தெரிகிறது. இதனால், எஸ்.பி., தாசில்தார் முன்னிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை பெற்று, உண்மை நிலையை கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.