/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
உடைப்பு ஏற்பட்ட மலட்டாற்றின் கரை சீரமைக்கப்படுமா?: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
/
உடைப்பு ஏற்பட்ட மலட்டாற்றின் கரை சீரமைக்கப்படுமா?: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
உடைப்பு ஏற்பட்ட மலட்டாற்றின் கரை சீரமைக்கப்படுமா?: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
உடைப்பு ஏற்பட்ட மலட்டாற்றின் கரை சீரமைக்கப்படுமா?: அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஆக 29, 2024 08:11 AM

விழுப்புரம்: விழுப்புரம் அருகே சேதமடைந்த மலட்டாற்றின் கரையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விழுப்புரம் மாவட்டம் வழியாக செல்லும் தென்பெண்ணையாற்றில், விழுப்புரம் அடுத்த தளவானுார் - வேலியம்பாக்கம் பகுதியில் மலட்டாறு பிரிந்து செல்கிறது.
இந்த மலட்டாறு, தளவனுார், சித்தாத்துார், காவணிப்பாக்கம், திருப்பாச்சனுார், பில்லுார், சேர்ந்தனுார், அரசமங்கலம், குச்சிப்பாளையம், பஞ்சமாதேவி, சின்னமடம், பூவரசங்குப்பம், மேட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, ரிங்காரெட்டிபாளையம் என, 50க்கும் மேற்பட்ட கிராமங்கள் வழியாக புதுச்சேரி நோக்கி செல்கிறது.
தென்பண்ணை ஆற்றைவிட குறுகியதாக இருந்தாலும், 100 அடி ஆழம் வரை மணல் வளத்தைக்கொண்டு, நீண்ட காலமாக பாய்ந்து ஓடி வருகிறது. விழுப்புரம், வளவனுார் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த 70 கிராமங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக உள்ள இந்த மலட்டாறு, தற்போது நீர்வரத்தின்றி வறண்டு கிடக்கிறது.
இந்நிலையில், தொடர் மழை காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த மலட்டாறில் தண்ணீர் வந்தது. விழுப்புரம், வளவனுார் அடுத்த பூவரசன்குப்பம் கிராமத்தில் மலட்டாற்றில் 300 மீட்டர் நீளத்திற்கு வலதுபுற கறை உடைந்து, தண்ணீர் அருகே செல்லும் தென்பெண்ணை ஆற்றில் மீண்டும் கலந்து வீணாகியது.
இதனால், மேட்டுப்பாளையம், கொங்கம்பட்டு, ரிங்காரெட்டிபாளையம் உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு நீர்வரத்தின்றி விவசாயம், நிலத்தடி நீர் ஆதாரம் பாதித்துள்ளது. பூவரசன்குப்பத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ள 300 மீட்டர் கரையை, 5 அடி உயரத்துக்கு மீண்டும் கட்டமைத்தால், 15 கிராமங்கள் பயனடையும் என, அந்த பகுதி விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள், கூறுகையில், 'மலட்டாறில், இரண்டு ஆண்டுகளுக்கு முன், பூவரசங்குப்பம் பகுதியில் கரை உடைப்பு ஏற்பட்டது. அதனை சீரமைக்க வேண்டும் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறைக்கு கோரிக்கை வைத்தோம்.
இந்நிலையில், தளவானுார் தொடங்கி பூரவரசங்குப்பம் வரை ஆற்றின் கரையை ரூ.65 கோடி மதிப்பில் புனரமைக்க, அரசிடம் திட்ட அறிக்கை சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அனுமதி பெற்று, அதற்கான பணி தொடங்கும் என, பொதுப்பணித்துறை கூறுகின்றனர்.
மழைக்காலம் நெருங்கி வருவதால், அதற்குள் தற்காலிக தீர்வாக, முதலில் பூவரசன்குப்பம் கிராமத்தில் உடைந்துள்ள கரையை சீரமைக்க வேண்டும். மழைக்காலத்துக்கு முன்பு இதனை செய்து முடிக்க வேண்டும்' என்றனர். எனவே, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

