/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வாகனங்களில் 'ஏர் ஹாரன்கள்' பறிமுதல் நடவடிக்கை... தொடருமா? : அபராதம் விதித்தும் தனியார் பஸ் டிரைவர்கள் அடாவடி
/
வாகனங்களில் 'ஏர் ஹாரன்கள்' பறிமுதல் நடவடிக்கை... தொடருமா? : அபராதம் விதித்தும் தனியார் பஸ் டிரைவர்கள் அடாவடி
வாகனங்களில் 'ஏர் ஹாரன்கள்' பறிமுதல் நடவடிக்கை... தொடருமா? : அபராதம் விதித்தும் தனியார் பஸ் டிரைவர்கள் அடாவடி
வாகனங்களில் 'ஏர் ஹாரன்கள்' பறிமுதல் நடவடிக்கை... தொடருமா? : அபராதம் விதித்தும் தனியார் பஸ் டிரைவர்கள் அடாவடி
ADDED : ஆக 21, 2025 11:25 PM

விழுப்புரம்: மாவட்டத்தில் விதிகளை மீறி வாகனங்களில் பயன்படுத்தும்'ஏர் ஹாரன்களை' பறிமுதல் செய்யும் நடவடிக்கையை அதிகாரிகள் தொடர்ந்து மேற்கொள்ள கோரிக்கை எழுந்துள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின்படி, 70 'டெசிபல்' அளவுக்கு ஒலி எழுப்பும் ஹாரன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதற்கும் அதிகமான டெசிபல் சத்தத்தால் காது கேளாமை உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளதாக, டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் அதிக ஒலி எழுப்பும் 'ஏர் ஹாரன்' பயன்பாட்டுக்கு போக்குவரத்து துறை தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி, உள்ளிட்ட பஸ் ஸ்டாண்டுகளில், தனியார் பஸ்கள் ஏர் ஹாரன்களை சர்வ சாதாரணமாக பயன்படுத்துகின்றன. நெரிசல் காரணமாக வாகனங்கள் ஊர்ந்து செல்லும் சமயத்தில், ஏர் ஹாரனை தொடர்ந்து அடிப்பது, பொதுமக்களுக்கு ஒருவித பதட்டத்தையும், எரிச்சலையும் ஏற்படுத்துகிறது.
சாலையில் செல்வோர் அதிர்ச்சி வாகன உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அந்தந்த வாகனத்திற்கு ஏற்ப, குறிப்பிட்ட 'டெசிபல்' உள்ள ஹாரனை பொருத்தி கொடுக்கின்றன. ஆனால், டூ வீலர், லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்கள் விதிகளை மீறி இஷ்டத்துக்கு, 'ஆல்டர்' செய்வதுடன், விதவிதமான ஏர் ஹாரன்கள் பொருத்திக் கொள்கின்றன. இந்த சத்தங்களை எழுப்பும் ஹாரன்கள் பயன்படுத்தப்படுவதால், சாலையில் செல்வோர் திடீரென அதிர்ச்சியடைகின்றனர்.
கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களிலும், இஷ்டத்துக்கு ஏர் ஹாரன் பயன்படுத்தப்படுவது நோயாளிகள், குழந்தைகளை பாதிக்கும் வகையில் உள்ளது. சில சமயங்களில் இரு சக்கர வாகன ஓட்டிகள், ஹாரன் ஒலியை தாங்கமுடியாது வாக்குவாதத்தில் ஈடுபடுவதும், கைகலப்பாக மாறுவதும் நடக்கிறது. இதனால், ஏர் ஹாரன்களை தடை செய்ய பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
போலீசார் நடவடிக்கை இந்நிலையில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் எதிரில் டிராபிக் சப் இன்ஸ்பெக்டர் குமாரராஜா, சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ஏர் ஹாரன் தொடர்பான வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, தனியார் மற்றும் அரசு பஸ்கள், லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் ஏர் ஹாரன்கள் பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, 8 தனியார் பஸ்கள், ஒரு லாரி ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்ட ஏர் ஹாரன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், ஒரு வாகனத்திற்கு தலா 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து துறை அலுவலர்கள் அவ்வபோது, வாகன சோதனை நடத்தி ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கின்றனர்.
ஆனால், அடுத்த சில தினங்களில், தனியார் பஸ் டிரைவர்கள் அடாவடியாக, மீண்டும் தங்களின் வாகனங்களில் ஏர் ஹாரன்களை பொருத்தி மக்களை அச்சுறுத்துகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' மாவட்டத்தில் ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டால் மட்டுமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
மேலும், போக்குவரத்து துறையினரும், டிராபிக் போலீசாரும் ஏர் ஹாரன் பயன்படுத்தும் வாகன டிரைவர்கள் மீது கடமைக்கு நடவடிக்கை எடுக்காமல், நிரந்தரமாக அவற்றை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.