/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கிளியனுாரில் நுாதன முறையில் மது கடத்திய பெண் கைது
/
கிளியனுாரில் நுாதன முறையில் மது கடத்திய பெண் கைது
ADDED : அக் 12, 2025 04:30 AM

வானுார் : பிரத்யேக ஆடை வடிவமைத்து, புதுச்சேரி மதுபானங்கள் கடத்திய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கிளியனுார் போலீசார் கடந்த, 8ம் தேதி புதுச்சேரி-திண்டிவனம் செல்லும் சாலையில், கிளியனுார் பஸ் நிறுத்தம் அருகில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் நோக்கி வந்த பஸ்சில் இருந்து இறங்கிய பெண், உப்புவேலுார் செல்லும் பஸ்சிற்காக காத்திருந்தார்.
அந்த பெண் மீது போலீஸ் ஏட்டு சத்யராஜூக்கு சந்தேகம் ஏற்பட்டது. அந்த பெண் நடந்து சென்ற போது பாட்டில்கள் உரசல் சத்தம் கேட்டது. இதையடுத்து அவர் அந்த பெண்ணை பிடித்து, கிளியனுார் போலீசில் ஒப்படைத்தார்.
அங்கிருந்த பெண் போலீசார் அந்த பெண்ணை சோதனை செய்தனர்.
அப்போது அவர், அவர் ஆடைகளுக்குள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆடையை அணிந்து கொண்டு அதில், 56 புதுச்சேரி மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.
போலீசார் விசாரணையில், அவர் கிளியனுார் அருகே உள்ள டி.பரங்கனி கிராமத்தைச் சேர்ந்த, அமுதா, 48; என்பது தெரிய வந்தது.
போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். அவரை கைது செய்வதற்கு காரணமாக இருந்த ஏட்டு சத்யராஜை, எஸ்.பி., சரவணன் நேரில் அழைத்து சான்று வழங்கி பாராட்டினார்.