ADDED : செப் 04, 2025 02:42 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு செய்த வாலிபரை, போலீசார் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
வி.மருதுார் பகுதியை சேர்ந்தவர் திருஞானம் மகன் கணபதி, 21; இவர் கடந்த ஆக., 4ம் தேதி கே.கே., சாலையில்,
கையில் இரும்பு ராடு வைத்து கொண்டு அவ்வழியே செல்வோரை வழிமறித்து மிரட்டினார். அப்போது அந்த வழியே இருசக்கர வாகனத்தில் சென்ற கிருஷ்ணசாமி என்பவரை, தாக்கியதோடு, அவரின் வாகனத்தை சேதப்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்தார்.
விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து கணபதியை கைது செய்தனர். இவர் மீது, அந்த போலீஸ் நிலையத்தில் அடிதடி, தகராறு உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அவரின் நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, அவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., சரவணன், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவின் பேரில், நேற்று விழுப்புரம் டவுன் போலீசார், கணபதியை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.