/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
--நீர்ப்பிடிப்பு பகுதி புதர் செடிகளால் ஆக்கிரமிப்பு
/
--நீர்ப்பிடிப்பு பகுதி புதர் செடிகளால் ஆக்கிரமிப்பு
--நீர்ப்பிடிப்பு பகுதி புதர் செடிகளால் ஆக்கிரமிப்பு
--நீர்ப்பிடிப்பு பகுதி புதர் செடிகளால் ஆக்கிரமிப்பு
ADDED : ஆக 08, 2024 04:19 AM
ராஜபாளையம்: கண்மாயில் ஆக்கிரமித்துள்ள புதர் செடிகளால் நீர் இருப்பு பாதிப்பு, விளை பொருட்கள் கொண்டுவர பாதையில்லை, துருப்பிடித்த ஷட்டர்களால் தண்ணீர் வெளியேற்ற வழியில்லை போன்ற பிரச்சனையால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
ராஜபாளையம் அய்யனார் கோயில் ஆற்றின் முதல் கண்மாயாக புதுக்குளம் கண்மாய் 200 ஏக்கருக்கும் அதிகமாக பாசன பகுதியுடன் அமைந்துள்ளது.
இதில் தண்ணீர் நிறைந்து அருகே கடம்பன்குளம், புளியங்குளம் கண்மாய் பகுதிகள் பாசன வசதி பெறுகின்றன. இதைச் சுற்றியுள்ள திருவள்ளுவர் நகர், தாட்கோ காலனி, வீரதர்மாபுரம் பகுதி குடியிருப்புகளுக்கு கண்மாயில் போர்வெல் அமைத்து குடிநீர் எடுக்கப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. கண்மாயின் தண்ணீர் சுவையாக இருப்பதால் குடிநீருக்கும் பயிர்கள் நன்கு வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் தண்ணீர் இருந்தது.
கண்மாயை ஒட்டியுள்ள ஆயிரக்கணக்கான வீடுகளின் போர்வெல்களில் நிலத்தடி நீர் தட்டுப்பாடு இன்றி கிடைத்தது.
நாளடைவில் கண்மாய் பராமரிப்பின்றி போனதுடன் கண்மாய் பெரும்பாலும் அடர்ந்து வளர்ந்துள்ள புதர்களால் மழை பெய்து தண்ணீர் தேங்கினாலும் தண்ணீர் கெட்டு விடுவதுடன் உவர்ப்பாக மாறி விடுகிறது.
கண்மாயை துார் வாராமல் விட்டதால் ஆழம் குறைந்து மண்மேவி நீர் பிடிப்பு குறைந்து விட்டது. வளர்ந்துள்ள புதர் செடிகள் தண்ணீரை வேகமாக உறிஞ்சி விடுகின்றன.
கண்மாயின் கலிங்கல் பகுதிகளை திறந்தவெளி பாராக மாற்றி பாட்டில்களை உடைத்தும், பிளாஸ்டிக் கப் உள்ளிட்டவற்றை அங்கேயே போட்டு விடுகின்றனர். நீர்வரத்து அதிகரிக்கும் போது கலிங்கல் ஷட்டர் துருப்பிடித்து திறக்க வழியில்லை. கண்மாயின் விளை பொருட்களை கொண்டு வர தகுந்த பாதை இல்லாமல் உள்ளதையடுத்து பராமரிப்பு பணிகளை தொடங்க வேண்டும்.
துார் வாருங்க
செந்தில்நாதன், நீர்ப்பாசன சங்க பொருளாளர்: ஒரு காலத்தில் புதுக்குளம் கண்மாய் தண்ணீர் மூலம் இரண்டு போக விவசாயம் நடந்தது.
தற்போது மண் மேவி புதர் செடி ஆக்கிரமிப்புகளால் நீர் பிடிப்பு பகுதிகள் குறைந்துள்ளதால் அதிக தண்ணீரை சேமிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. துார்வாரி கரைகளை உயர்த்த வேண்டும்.
முறையான பாதை வேண்டும்
வடிவேல் முருகன், விவசாயி: ஏற்கனவே தனியார் கரும்பு ஆலை நிர்வாகத்தினர் சார்பில் போடப்பட்டிருந்த ரோடு மராமத்து பணிகளின் போது உடைந்து தற்போது மண்பாதையாக உள்ளது.
கண்மாயை ஒட்டி உள்ள மூன்று கிலோமீட்டர் துாரத்திற்கு இடு பொருட்களை கொண்டு செல்லவும், விளை பொருட்கள் வெளியே கொண்டு வரவும், அறுவடை இயந்திரங்கள் கொண்டு செல்லவும் பாதைக்கு தடை ஏற்பட்டுள்ளது. மழைக்காலத்தில் பயணிக்க முடியாமல் பதிந்து விடுகிறது. பாதையை முறைப்படுத்த வேண்டும்.