/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆய்வில் மந்தம்: அதிகரிக்கும் கனிமவள கொள்ளை
/
ஆய்வில் மந்தம்: அதிகரிக்கும் கனிமவள கொள்ளை
ADDED : ஜூன் 26, 2024 07:33 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் கனிம வளத்துறையின் ஆய்வுகள் குறைந்துள்ளதால் பல்வேறு பகுதிகளில் கனிமவள கொள்ளை அதிகரித்து வருகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மாவட்டத்தில் 150க்கும் மேற்பட்ட உடைகல், சுண்ணாம்புக்கல், கிராவல், கிரஷர் குவாரிகள் செயல்படுகின்றன.
வெளிமாவட்டங்களில் குவாரி தோண்டுவதற்கான அனுமதி காலம் முடிந்துள்ள நிலையில் கடந்த மாதம் முதலே விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அதிகப்படியான கனிமவளங்கள் வெளிமாவட்டத்திற்கு லாரிகள் மூலம் சென்று வருவதாக குற்றச்சாட்டு இருந்தது.
இந்நிலையில் கனிமவளத்துறை துணை இயக்குனராக இருந்த தங்க முனியசாமி ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வந்தார். அவர் மே 31 உடன் ஓய்வு பெற்று விட்ட நிலையில், கனிமவளத்துறையில் ஆய்வுகளில் மந்தம் ஏற்பட்டுள்ளது.
மேலும் அவர் இருந்த போது நடவடிக்கை எடுக்கப்பட்ட பல குவாரிகளுக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டு அவற்றில் மீண்டும்கனிமவளம் சுரண்டப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது.
மேலும் சில குவாரிகளில் கனிமவளத்துறை அனுமதித்ததை விட ஆழமாகவும், பக்கத்து நிலங்களை விலைக்கு வாங்கியும் கனிமங்களை கொள்ளையடிக்கின்றனர்.
குவாரி வைத்திருப்பவர்கள் அரசியல் பின்புலமும், முக்கிய புள்ளிகளுக்கு வேண்டியவர்களாக இருப்பதால் கனிமவள கொள்ளை தாராளமாக நடக்கிறது.
மாவட்ட நிர்வாகம் இந்த சுருட்டலை தடுத்து உடனடியாக அத்துமீறி செயல்படும் குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி வெளிமாவட்டங்களுக்கு கனிமவளங்களை விற்போர் மீதும் நடவடிக்கை அவசியமாகிறது.