/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி
/
மின்வேலியில் சிக்கி காட்டு யானை பலி
UPDATED : ஆக 18, 2024 06:08 PM
ADDED : ஆக 18, 2024 04:06 PM
ராஜபாளையம்:
ராஜபாளையத்தில் தோப்புக்குள் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஸ்ரீவில்லிபுத்தூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட ராக்காச்சி அம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் விரியன் கோயில் பீட்டில் அழகர் காடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய தென்னந்தோப்பு உள்ளது. இந்த தோப்புக்குள் வன விலங்குகள் வந்து பயிர்களை சேதப்படுத்துவதை தவிர்க்க, மின் கம்பியிலிருந்து சட்ட விரோதமாக மின்வேலி அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் வனப்பகுதிக்குள் இருந்து உணவு தேடி தோப்புக்குள் வந்த சுமார் 15 வயது மதிக்கத்தக்க ஆண் யானை தென்னங்கன்றை தின்றுள்ளது. அப்போது மின் வேலியில் சிக்கி மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவராஜ் தலைமையிலான வனத்துறையினர் தற்போது சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
கால்நடை மருத்துவர்கள் வந்து இறந்த யானையை உடற்கூறு ஆய்வு செய்த பின்னரே மற்ற தகவல்கள் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஒருவரை பிடித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.