ADDED : மார் 09, 2025 03:31 AM
ஸ்ரீவில்லிபுத்துார் : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக வருவாய்துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித் தொகையை பெறுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு உத்தரவுகள் வழங்கப்பட்டு இதுவரை கிடைக்காமல் தவித்த பயனாளிகளின் எண்ணிக்கை குறித்த விபரங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சேகரித்துள்ளது.
தமிழகத்தில் விதவைகள், கணவனால் கைவிடப்பட்டவர்கள், முதிர்கன்னிகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையில் வருவாய் துறையின் சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1200 முதல் ரூ. 1500 வரை பல லட்சம் பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது.
துவக்கத்தில் தபால் அலுவலகங்கள் மூலம் நேரடியாக பயனாளிகளுக்கு ரொக்கமாக வழங்கப்பட்டு வந்தது. ஆனால், நடைமுறை சிக்கல்களால் தற்போது பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு வருவாய் நிர்வாக ஆணையாளர் அலுவலகத்திலிருந்து வரவு வைக்கப்படுகிறது.
இந்நிலையில் ஆண்டுதோறும் தாலுகா வாரியாக புதிதாக ஏராளமானோர் இந்த உதவித்தொகை பெற விண்ணப்பித்து வருகின்றனர். இதனை வருவாய்த் துறையினர் நேரடி கள ஆய்வு செய்து தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.
அதன்படி ஒவ்வொரு தாலுகாவிலும் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் கண்டறியப்பட்டு தகுந்த உத்தரவுகள் வழங்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இதுவரை உதவி தொகை வழங்கப்படவில்லை. இதனால் பயனாளிகள் உதவித்தொகை கிடைக்காமல் தவித்து வருவதாக பிப். 25ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது.
இதனையடுத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் தாலுகா வாரியாக தற்போது வரை பணம் பெறாத பயனாளிகளின் பட்டியல் எண்ணிக்கை விபரம் கோரப்பட்டுள்ளது. இதனை சமூக பாதுகாப்பு திட்ட அலுவலர்கள் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கு அனுப்பி உள்ளனர்.இதுகுறித்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து விரைவில் இவர்களுக்கும் உதவித்தொகை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.