/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பணிமனைகளில் கழிவறை குளியலறை பற்றாக்குறை
/
பணிமனைகளில் கழிவறை குளியலறை பற்றாக்குறை
ADDED : ஆக 29, 2024 04:40 AM
விருதுநகர்: விருதுநகர் மாவட்ட அரசு போக்குவரத்து பணிமனைகளில் ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கழிவறை, குளியலறைகளில் பற்றாக்குறையே நீடிக்கிறது. தற்போது இருப்பவையும் சுகாதாரமான முறையில் இல்லாமல் இருப்பதால் ஊழியர்கள் அவதிக்குஉள்ளாகி வருகின்றனர்.
மாவட்டத்தில் உள்ள 9 அரசு போக்குவரத்து பணிமனைகளில் 449 அரசு பஸ்கள் உள்ளது. இதில் வரையறுக்கப்பட்ட சேவைகளின் எண்ணிக்கை 418, தற்போது பணிபுரியும் பணியாளர்களின் எண்ணிக்கை 2449. இந்நிலையில் அருப்புக்கோட்டை, சாத்துார், சிவகாசி பணிமனைகளில் பணியாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தேவையான கழிவறை, குளியலறை இல்லாத சூழ்நிலை நீடிக்கிறது.
இங்கு பயன்பாட்டில் இருந்தவையும் கட்டட சேதத்தால் இடிக்கப்பட்டது. தற்போது உதாரணமாக 300 பணியாளர்களுக்கு 3 முதல் 5 கழிவறைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இவையும் முறையாக சுத்தம் செய்யப்படாமல் அசுத்தமாக துார்நாற்றத்துடன் காணப்படுகிறது.
இந்த கழிவறை பற்றாக்குறையால் காலை, மாலை நேரங்களில் பணியாளர்கள் அவதிக்குள்ளாவது தொடர்கதையாக உள்ளது. மேலும் ஊரகப்பகுதிகளில் அமைக்கப்படும் குளியலறைகள் போல பணிமனைகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஊழியர்கள் ஒன்றாக நின்று குளிக்க வேண்டிய நிலை உள்ளது.
அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் கழிவறைகள்,குளியலறைகள் கட்ட வேண்டும் என பல முறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.
எனவே பணியாளர்கள் சிரமத்தை தவிர்க்க போக்குவரத்து பணிமனைகளில் தேவையான வசதிகளை செய்ய மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.