/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாவட்டத்தில் வராம் ஒரு முறை மாஸ் கிளீனிங்
/
மாவட்டத்தில் வராம் ஒரு முறை மாஸ் கிளீனிங்
ADDED : மே 10, 2024 01:52 AM
மாவட்டத்தில் சிவகாசி மாநகராட்சி விருதுநகர் , அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், சாத்துார் ஆகிய நகராட்சிகள் உள்ளன. இந்த நகர் பகுதிகளில் 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாரம் ஒரு முறை 'மாஸ் கிளீனிங்' நடைபெற்று வந்தது. இத்திட்டத்தின் படி, மாநகராட்சி, நகராட்சியில் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து அங்குள்ள பிரச்னைகள் சரி செய்யப்படும்.
உதாரணமாக தெருக்களில் உள்ள குப்பை அகற்றப்படும். ரோடு சுத்தம் செய்தல், வாறுகால் துார்வாருதல் உள்ளிட்ட பல்வேறு துாய்மை பணிகள் நடைபெறும். நகரில் அனைத்து பகுதிகளிலும் உள்ள சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் துப்புரவு பணியாளர்கள் இதில் பங்கு பெறுவர். இதேபோல் ஒவ்வொறு வாரமும் ஏதாவது ஒரு வார்டினை தேர்வு செய்து இந்தப் பணியினை மேற்கொள்வர்.
இந்த பணிகள் நடைபெற்றதால் ஒவ்வொறு வார்டும் சுகாதாரமான நிலைக்கு மாறியது. இதேபோல் சுழற்சி முறையில் அடுத்தடுத்த வார்டுகளில் பணிகள் நடைபெறும். ஆனால் தற்சமயம் மாஸ் கிளீனிங் நடைபெறாமல் நகரங்களில் குப்பை முறையாக அகற்றப்படுவதில்லை. வாறுகால் முறையாக துார்வாரப்படுவதில்லை.
இதனால் டெங்கு உள்ளிட்ட தொற்று நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இப்பணிகள் நடைபெறாததால் சுகாதாரம் கேள்விக்குறியாகிறது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தப் பணி நடை பெற வில்லை. மாவட்டத்தில் பல நகர்களில் இந்தப் பணிகள் நடைபெறாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
எனவே மாவட்டத்தில் அனைத்து நகரங்களிலும் ஏற்கனவே செயல்பாட்டில் இருந்த மாஸ் கிளீனிங் முறையை மீண்டும் கொண்டு வர வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.