ADDED : ஜூன் 26, 2026 05:40 PM
நடைபாதைகளை ஆக்கிரமிக்கும் கடைகள், வாகனங்கள்
*சிரமத்தில் ஸ்ரீவில்லிபுத்துார் மக்கள்
ஸ்ரீவில்லிபுத்துார், ஜூன் 27-
ஸ்ரீவில்லிபுத்துார் நகரில் கடைகள், வாகனங்கள் ஆக்கிரமிப்பால்
தேசிய, மாநில நெடுஞ்சாலைகள், பஜார் வீதிகள் குறுகி மக்கள் தினமும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
நகரில் பஸ் ஸ்டாண்டை சுற்றி அரசு மருத்துவமனை, காய்கறி மார்க்கெட், தனியார் மருத்துவமனைகள், வங்கிகள் இருப்பதால் தினமும் வாகன போக்குவரத்து அதிகளவில் இருப்பதாலும், நடைபாதைகளில் டூவீலர்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டு கடும் போக்குவரத்து ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் பள்ளிவாசல் முதல் ஆண்டாள் கோவில் வரை பஜார் வீதிகளில் தள்ளுவண்டி கடைகளின் நடைபாதை ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருகிறது.
அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து ரோடுகளிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து எளிதில் ஆம்புலன்ஸ்கள் வர முடியாத நிலை உள்ளது. குறிப்பாக உழவர் சந்தை வடபுறம் அரசு மருத்துவமனை செல்லும் ரோட்டில் வாறுகால் பாலத்தை நகராட்சி நிர்வாகம் தோண்டி போட்டு 8 மாதங்கள் ஆகியும் இன்னும் சீரமைக்க வில்லை.
அரசு பஸ் டிப்போ முதல் காமராஜர் சிலை சின்ன கடை பஜார் வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்லும் ரோட்டில் நடைபாதை ஆக்கிரமிப்பு அதிக அளவில் காணப்படுகிறது.
நான்கு ரத வீதிகளிலும் கடைகள் போட்டி போட்டு நடைபாதைகளில் சிமெண்ட் தளம் அமைத்து ஆக்கிரமித்து வருகின்றனர்.
தற்போது நான்கு வழிச்சாலையாக நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சிவகாசி ரோட்டின் வழியாக வருவதால் சர்ச் சந்திப்பில் இருந்து செங்குளம் விலக்கு வரை போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது.
நகரில் பல ஆண்டுகளாக முழு அளவில் ஆக்கிரமிப்புகள் அகற்றாததால் எளிதில் வாகனங்கள் வர முடியாத நிலை காணப்படுகிறது.
காலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை பென்னிங்டன் மார்க்கெட் பகுதியில் ரோட்டில் இருபுறமும் லாரிகள் நிறுத்த படுவதால் பஸ் ஸ்டாண்டிற்கு பஸ்கள் எளிதாக வர முடியாத நிலை உள்ளது.
நகரில் நிலவும் ஆக்கிரமிப்புகள், போக்குவரத்து நெருக்கடிகளை முழு அளவில் அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
* விபத்து அபாயம்
தற்போது நான்கு வழிச்சாலையாக ஸ்ரீவில்லிபுத்தூர் வரும் வாகனங்கள் சிவகாசி ரோடு வழியாக வருவதால் அதிக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. சர்ச் சந்திப்பில் நாளுக்கு நாள் ரோட்டை கடந்து செல்ல முடியாத அளவிற்கு மக்கள் சிரமத்தை சந்திக்கின்றனர். சிவகாசி ரோட்டில் பள்ளிகள் இருப்பதால் மாணவர்கள் விபத்து அபாயத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
- சமுத்திரம், ஸ்ரீவில்லிபுத்துார்
* டூவீலரில் கூட செல்ல முடியவில்லை
பஸ் ஸ்டாண்ட், அனைத்து பஜார் வீதிகளில் ஆக்கிரமிப்புகளும், போக்குவரத்து நெருக்கடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் எதிரும், புதிருமாக இரு வாகனங்கள் சென்று வந்த நிலையில் தற்போது பஸ் ஸ்டாண்ட்டை சுற்றியுள்ள ரோடுகளில் ஒரு வாகனம் கூட எளிதில் செல்ல முடியாத நிலை உள்ளது. டூவீலரில் கூட பஜார் வீதியில் எளிதாக செல்ல முடியவில்லை.
- கோட்டிமுத்து, வழக்கறிஞர்
தீர்வுகள்
* நகரில் தேசிய, மாநில நெடுஞ்சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரப்புகளை முழு அளவில் அகற்றி ரோட்டை விரிவாக்கம் செய்து சென்டர் மீடியன் அமைக்க வேண்டும்.
* போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்படும் டூவீலர்களை ஒழுங்குபடுத்த வேண்டும்.
* அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து மாதம் ஒருமுறை வீதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
