ADDED : ஆக 05, 2024 07:23 AM

சிவகாசி : சிவகாசி கிழக்கு மயான ரோட்டில் இடிந்து விழும் நிலையில் உள்ள பாலத்தால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்படுகின்றனர். உடனடியாக புதிய பாலம் கட்ட வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி காந்தி ரோடு கிழக்கு மயான ரோடு பகுதியில் ஏராளமான பட்டாசு கடைகள், அச்சு தொழில் நிறுவனங்கள் உள்ளன. எனவே இப்பகுதியில் அதிகளவில் கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கிழக்கு மயான சாலையில் உள்ள பாலம் சேதம் அடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.
இப்பகுதியில் வருகின்ற அனைத்து கனரக வாகனங்களும் இந்த பாலத்தில் தான் சென்று வருகின்றன. பாலத்தின் தடுப்புச் சுவரும் இடிந்து விழுந்து விட்டது. பாலம் சேதத்தால் அதிக லோடு ஏற்றி வருகின்ற வாகனங்கள் அச்சத்துடனே வரவேண்டியுள்ளது.
மிகவும் குறுகியதாக உள்ள பாலத்தில் தடுப்பு சுவரும் இல்லாததால் டூவீலரில் செல்பவர்கள் அடிக்கடி விழுகின்றனர்.
எனவே சேதமடைந்த பாலத்தை அகற்றி புதிதாக பெரிய பாலம் அமைக்க வேண்டும் என இப்பகுதியினர் எதிர்பார்க்கின்றனர்.