மாவட்டத்தில் நகர், கிராமப் பகுதிகளில் குடிநீர் ஆதாரத்திற்காகவும், குளிக்க துணி துவைக்க என புழக்கத்திற்காகவும் ஊருணிகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. மழைக்காலங்களில் ஊருணியில் தண்ணீர் வந்து அப்பகுதியினரின் பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்யும்.
இதனால் அவ்வப்போது ஊருணியை உள்ளாட்சி நிர்வாகங்கள் பராமரித்து வந்தது. ஆனால் தற்போது பல்வேறு நகர், கிராமங்களில் ஊருணியை உள்ளாட்சி நிர்வாகம் பராமரிப்பதில்லை. இதனால் ஊருணிகளில் ஆகாயத்தாமரைகள், முட்புதர்கள், கோரை புற்களோடு, பாசியும் படர்ந்து வீணாக காட்சி அளிக்கிறது.
இது தவிர பல ஊருணிகள் குப்பைக் கிடங்காகவும் மாறிவிட்டது. இதனால் ஊருணியில் துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதார கேட்டிற்கும் வழி வகுக்கிறது. மாவட்டத்தில் பல ஊர்களில் உள்ள ஊருணிகளுக்கும்இந்த நிலைதான்.
சிவகாசி பகுதியில் நாரணாபுரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊருணி, எரிச்சநத்தம் ஊருணி, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சி அலுவலகம் அருகே உள்ள ஊருணி, பேர் நாயக்கன்பட்டி பஸ் ஸ்டாப் அருகே உள்ள ஊருணி உள்பட பல்வேறு ஊருணிகள் பாசி படந்து காணப்படுகிறது.
இது தவிர புதுக்கோட்டை, சித்தம நாயக்கன்பட்டி , நமஸ்கரித்தான் பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஊருணிகள் குளங்கள் பாசி படர்ந்து வீணாக உள்ளது. இதனால் ஊருணி தண்ணீரை எதற்கும் பயன்படுத்த முடியவில்லை.
கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் கண்மாய்கள், ஊருணிகள் போன்ற நீர் நிலைகள் குடி மராமத்து பணியில் கீழ் துார்வாரப்பட்டது. கடந்த மழை சீசனில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையால் ஊருணி, குளங்களுக்கு தண்ணீர் வந்தும் பயன்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் அடுத்த சில மாதங்களில் பருவமழை தீவிரமாக துவங்கிவிடும். அதற்கு முன்பாக தற்போதய கோடைகாலத்தை பயன்படுத்தி நகர், கிராமப் பகுதியில் உள்ள ஊருணிகளை துார்வாரி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இதனால் குடிநீர் ஆதாரம் பெருகுவதோடு, மக்களின் புழக்கத்திற்கும் ஊருணிகள் பயன்படும்.

