/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் உச்சம் 5 மாதங்களில் 28 பேர் உயிரை பறித்தது
/
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் உச்சம் 5 மாதங்களில் 28 பேர் உயிரை பறித்தது
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் உச்சம் 5 மாதங்களில் 28 பேர் உயிரை பறித்தது
பட்டாசு ஆலைகளில் விதிமீறல் உச்சம் 5 மாதங்களில் 28 பேர் உயிரை பறித்தது
ADDED : மே 10, 2024 11:19 PM

சிவகாசி:விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி, சாத்துார், வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதிகளில் நாக்பூர், டி.ஆர்.ஓ., சென்னை உரிமம் பெற்ற, 1,074 பட்டாசு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் எப்போதாவது, எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுவது இயல்பு தான்.
அவ்வாறு ஏற்படும் விபத்தில் பெரிய பாதிப்பு இருக்காது. ஆனால், ஆலைகளில் பாதுகாப்பின்றி, விதிமீறல்களுடன் பட்டாசு உற்பத்தி செய்வதால் ஏற்படும் வெடி விபத்தால் உயிர்பலி ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
கூடுதல் விதிமீறல்
நடப்பாண்டு ஜனவரியில் இருந்து தற்போது வரை, 28 பேர் இறந்துள்ளனர். ஜனவரியில் ஐந்து விபத்துகளில் ஆறு பேரும், பிப்ரவரியில் மூன்று விபத்துகளில் 12 பேரும் பலியாகி உள்ளனர். இம்மாதம் மூன்று விபத்துகளில் 10 பேர் பலியாகி உள்ளனர்.
பொதுவாக பட்டாசு ஆலை வைப்பதற்காக உரிமம் பெற்ற ஒருவர், தன் ஆலையை மற்றவருக்கு குத்தகைக்கு விடுவது இயல்பு. இதுவே விதிமீறல் என்ற நிலையில், குத்தகைக்கு எடுத்த நபர் ஆலையில் உள்ள அறைகளை பல்வேறு நபர்களுக்கு தனித்தனியாக உள் குத்தகைக்கு விடுகிறார். இங்கே தான் கூடுதல் விதிமீறல் ஆரம்பமாகிறது.
உதாரணமாக நாக்பூர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலையில் குறைந்தது, 40 அறைகள் இருக்கும். இதில், அனைத்து அறைகளுமே வெவ்வேறு நபர்களுக்கு குத்தகைக்கு விடப்படுகின்றன.
பட்டாசு தயாரிக்கும் பணி மேற்கொள்ளப்படும் அறையில் அளவைப் பொறுத்து, அதிகபட்சம் நான்கு பேர் மட்டுமே இருக்க வேண்டும். மணி மருந்து அலசும் பணி மேற்கொள்ளப்படும் அறையில் இருவர் மட்டுமே இருக்க வேண்டும்.
ஆனால், குத்தகைக்கு எடுக்கப்பட்ட பட்டாசு ஆலைகள் இந்த விதிமுறைகளை கடைபிடிக்காமல், மூன்று மடங்கு பணியாளர்களை கொண்டு உற்பத்தி செய்கின்றன.
ஏனெனில், உள் குத்தகைக்கு எடுத்த நபர்கள் உற்பத்தியை பெருக்க அதிக ஆட்களை வைத்து அதிக மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்கின்றனர்.
ஏற்கனவே தாயில்பட்டி அருகே கனஞ்சாம்பட்டி பட்டாசு ஆலையில் நடந்த வெடிவிபத்திற்கு, உள் குத்தகைக்கு விடப்பட்டதே காரணம் என தெரியவந்தது.
கண்டுகொள்வதில்லை
எந்த விபத்து நடந்தாலும் அதில் பட்டாசு ஆலை உரிமையாளர் சிக்குவதில்லை. மேலாளர், போர்மேன் போன்றவர்கள் பலிகடா ஆக்கப்படுவர்.
ஆலை உரிமையாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்தாலே, இந்த விதிமீறல்கள் தடுக்கப்படும். ஆனால், அவர்கள் குத்தகைக்கு விடுவதோடு சரி. பின்னர் கண்டு கொள்வதில்லை. இதனால் குத்தகைக்கு எடுத்தவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு உற்பத்தியை மேற்கொள்கின்றனர்.
ஆலைகளில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு இந்த தவறு தெரிந்தும் கண்டுகொள்வதில்லை. வரும் காலங்களில் இதுபோன்று விதி மீறி இயங்கும் பட்டாசு ஆலைகளில் முறையாக ஆய்வு மேற்கொண்டு கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அப்பாவி உயிர்கள் பறிபோவதை தடுக்க முடியும்.