ADDED : செப் 25, 2025 04:53 AM

ராஜபாளையம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார விவசாய தோப்புகளில் புகுந்த யானை கூட்டம் வாழை தென்னை மரங்களை சேதப்படுத்தியது.
ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் ராக்காச்சி அம்மன் கோயில் பாதையில் ஓடைக்காடு பகுதியில் முருகன் குத்தகை எடுத்து 20 ஏக்கர் விவசாயம் செய்து வருகிறார்.
இதில் தென்னை மரங்களும், ஆயிரத்திற்கும் அதிகமான வாழை மரங்களை கடந்த ஒரு வருடத்திற்கும் அதிகமாக பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தோப்பிற்குள் புகும் யானை கூட்டம் வாழை மரங்களை ஒடித்து சேதப்படுத்தியதுடன், தென்னை மரங்களையும் சாய்த்து பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விவசாயி முருகன்: ஒரு சில நாட்களில் பயன் தரக்கூடிய வாழை மரங்கள் முழுவதும் யானை கூட்டம் புகுந்து சேதம் ஏற்படுத்தியதால் பல லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. வனத்துறையினர், வருவாய்த் துறையினர் இழப்பீடை அரசுக்கு பரிந்துரை செய்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.