/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கலரை மாற்றி, கவரை மாற்றி விலையை உயர்த்திய ஆவின்
/
கலரை மாற்றி, கவரை மாற்றி விலையை உயர்த்திய ஆவின்
ADDED : ஜன 18, 2025 12:27 AM

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் அதிகம் விற்பனையான எப்.சி.எம் என்ற வகை பாலை நிறுத்திவிட்டு விலை அதிகம் உள்ள டீமேட் பால் மட்டுமே வழங்கப்படுவதால் விற்பனையாளர்கள், டீகடைக்காரர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
2021ல் தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் என அறிவித்தது. ஆனால் 2022 நவ. ல் லிட்டருக்கு ரூ.12 வரை உயர்த்தப்பட்டது. பல வகைகளில், வண்ணங்களில் பால் பாக்கெட்டுகள் மாற்றப்பட்டு பல்வேறு விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டன.
சமன்படுத்திய பால்(டி.எம்.), நிலைப்படுத்திய பால் (எஸ்.எம்.), நிறை கொழுப்பு பால் (எப்.சி.எம்)., இருநிலை சமன்படுத்திய பால் (டி.டி.எம்.), 'டீ மேட்' என பல வகைகளில் வெவ்வேறு விலைகளில் ஆவின் பால் விற்கப்படுகிறது. இதில் 6 சதவீதம் உள்ள நிறை கொழுப்பு பால்(எப்.சி.எம்) லிட்டர் ரூ.60க்கு விற்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் பெரும்பாலும் இந்த வகையே பயன்படுத்தப்படுகிறது. தற்போது இதன் விற்பனையை நிறுத்தி விட்டு 'டீ மேட்' எனும் 5.5 சதவீதம் கொழுப்பு சத்துள்ள, கூடுதல் விலையுள்ள பால் மட்டுமே விருதுநகர் மாவட்டத்தில் விற்கப்படுகிறது. இந்த பால் விலை லி. ரூ.68 ஆகும்.
ஆவின் அதிகாரி கூறியதாவது: இயந்திர பழுதால் ஸ்ரீவில்லிபுத்துாரில் பால் பேக்கிங் செய்யப்படவில்லை. மதுரை மாவட்டத்தில் இருந்து ஒரு வாரமாக பெற்று வருகிறோம். டீ மேட் பாலுக்கு மதுரை மாவட்டத்தில் பெரும் வரவேற்பு உள்ளது. அங்கு விற்கும் அதே ரூ.68க்கு தான் இங்கும் விற்கிறோம். டீக்கடைகள், வணிக பயன்பாடுகளில் எந்த பாதிப்பும் வராது என்றார்.