/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பழுது தண்ணீர் தேக்க முடியாத பரிதாபம்
/
ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பழுது தண்ணீர் தேக்க முடியாத பரிதாபம்
ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பழுது தண்ணீர் தேக்க முடியாத பரிதாபம்
ஆனைக்குட்டம் அணை ஷட்டர் பழுது தண்ணீர் தேக்க முடியாத பரிதாபம்
ADDED : டிச 15, 2024 05:37 AM

சிவகாசி: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணைக்கு மழை பெய்து தண்ணீர் வந்தும் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். சேதமடைந்த ஷட்டர்களை சீரமைப்பதற்காக ரூ. 49 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி அருகே ஆனைக்குட்டம் அணை 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. 27 அடி உயரம் கொண்ட அணையில் 9 மதகுகள் உள்ளது. திருத்தங்கல் செங்கமலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடமலாபுரம், முதலிப்பட்டி, வாடியூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் 3003 ஹெக்டர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதியாக உள்ளது. இதனை நம்பி நெல், வாழை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டது. ஆனால் தற்போது ஒரு ஹெக்டர் பாசன வசதி கூட இல்லை.
மேலும் விருதுநகர், திருத்தங்கல் நகரங்களுக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் எவ்வளவு மழை பெய்தாலும் இதுவரையிலும் அணை நிரம்பியது இல்லை. மழையால் தண்ணீர் வந்தவுடன் மதகுகளில் ஷட்டர் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறிவிடும். மேலும் அணை பலவீனமாக இருப்பதால் கடந்த காலங்களில் 18 அடி உயரம் வரை தண்ணீர் வந்ததும் அதனை தேக்க முடியாமல் அணையின் பாதுகாப்பு கருதி வீணாக வெளியேற்றப்படுகின்றது.
இந்நிலையில் இப்பகுதியில் இரு நாட்களாக பரவலாக மழை பெய்த நிலையில் அணைக்கு தண்ணீர் வந்தது. 12 அடி வரை தண்ணீர் வந்த நிலையில் ஷட்டர்கள் பழுதால் தண்ணீர் வீணாக வெளியேறி வருகின்றது. 2022 மார்ச் 1ல் அணை பாதுகாப்பு குழு அதிகாரிகள் ஷட்டர் பழுது, அணையின் தன்மை குறித்து ஆய்வு செய்தனர். பொதுப்பணி துறையினர் அணையினை பலப்படுத்தவும் 9 ஷட்டர்களையும் எடுத்துவிட்டு நவீன முறையில் புதிய ஷட்டர்களை அமைக்கவும் பரிந்துரைத்தனர்.
அடுத்தடுத்து அதிகாரிகள் பார்வையிட்டு வந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் ஆறு மாதங்களுக்கு முன்பு நவீன முறையில் ஷட்டர்கள் அமைப்பதற்காக ரூ. 49 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் ஷட்டர்கள் டிசைன் செய்யப்படும் பணி நடந்து வருகின்றது. விரைவில் இப்பணி முடிந்து அடுத்த மழைக்காலத்திலாவது அணையில் தண்ணீர் தேங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
இப்பகுதி விவசாயிகள் கூறுகையில், நவீன முறையில் ஷட்டர் அமைப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணியினை விரைந்து முடிக்க வேண்டும். ஏனெனில் மழை பெய்து அணைக்கு தண்ணீர் வந்தும் தேக்க முடியவில்லை. வீணாக வெளியேறி வருகிறது. எனவே உடனடியாக புதிய ஷட்டர்களை அமைக்க வேண்டும், என்றனர்.