/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சாத்துார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
/
சாத்துார் பட்டாசு ஆலையில் வெடிவிபத்து
ADDED : செப் 29, 2024 02:35 AM

சாத்துார்:விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து அதிர்வில் 20 வீடுகள் சேதமடைந்தன. 10 கி.மீ., துாரத்திற்கு வெடிச்சத்தம் கேட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தொடர்ந்து 4 மணி நேரம் வெடித்ததில் பத்திரிக்கையாளர்கள், தீயணைப்பு வீரர்கள், போலீசார் மயிரிழையில் உயிர் தப்பினர்.
சிவகாசி விஸ்வநத்தத்தை சேர்ந்தவர் கே.வி.கந்தசாமி. இவருடைய திருமுருகன் பட்டாசு ஆலை முத்தால் நாயக்கன் பட்டியில் உள்ளது. நாக்பூர் லைசென்ஸ் பெற்ற இந்த ஆலையில் 60க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்சி ரகபட்டாசுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
நேற்று முன்தினம் மாலை பெய்த கனமழையால் தொழிலாளர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். இதில் மருந்து கலவை அறையில் மீதம் இருந்த மணி மருந்தை சரிவர அகற்றவில்லை. நேற்று காலை 6:30 மணிக்கு ஆலையின் மணி மருந்து கலவை அறையில் இருந்து மணி மருந்து நீர்த்து வெண் புகை கிளம்பியதை சி.சி.டி.வி. கேமராவில் பார்த்த ஆலையில் தங்கி பணிபுரியும் வட மாநில தொழிலாளர்கள் அலறி அடித்து வெளியேறினர். சிறிது நேரத்திலேயே வெடி விபத்து ஏற்பட்டது.
காலை 6:50 மணிக்கு முதல் வெடிச்சத்தம் கேட்டது. ஆலையின் அடுத்தடுத்த அறைகள் தொடர்ந்து வெடித்து சிதறின. 10 கி.மீ., துாரத்திற்கு அதிர்வு உணரப்பட்டது.
பறந்த லாரி சக்கரம்
மேலும் பட்டாசுகளை ஏற்றி நின்று கொண்டிருந்த லாரி முற்றிலுமாக வெடித்து சிதறியது. இதன் ஆக்சில் சக்கரத்துடன் பறந்து பாக்டரியின் காம்பவுண்ட் சுவரை துளைத்து ரோட்டின் மறுபுறம் உள்ள காலியிடத்தில் கிடந்தது.
காலை 8:30 மணிக்கு டி.எஸ்.பி.நாகராஜன் தலைமையில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் ஆலைக்குள் சென்று தீயை அணைக்க சென்ற போது மீண்டும் மற்றொரு அறையில் பூமி அதிரும் வகையில் ெவடிவிபத்து ஏற்பட்டது. இதில் போலீசாரும், தீயணைப்பு வீரர்களும், பத்திரிக்கையாளர்கள் நாலாபுறமும் தப்பி ஓடி உயிர் தப்பினர். தொடர்ந்து 4 மணி நேரத்திற்கும் மேலாக பட்டாசு வெடித்து கொண்டிருந்தன.
காலை 10:30 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் ஆலைக்குள் சென்று தண்ணீரை அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து பட்டாசுகள் வெடித்த நிலையில் மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடிபாடுகளில் உடல்கள் உள்ளதா என தேடினர். பட்டாசுகள் தொடர்ந்து வெடித்ததால் சாலை போக்குவரத்தை போலீசார் நிறுத்தினர்.
இந்நிலையில் பட்டாசு ஆலைக்கு அருகில் உள்ள புதுக் காலனியில் வெடிசத்தத்தில் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் ஆஸ்பெட்டாஸ் கூரை சேதமடைந்தது. பேன், டி.வி. சேதமடைந்தன. யாரும் காயமடைவில்லை.சேதமடைந்த தங்கள் வீடுகளை சீரமைக்க இழப்பீடு வழங்க கோரி அப்பகுதி மக்கள் சிறிது நேரம் சாலை மறியல் செய்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற ஆர்.டி.ஓ. சிவகுமார் சமரசம் செய்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.
இந்த வெடி விபத்தில் பட்டாசு ஆலையின் 5 அறைகள் தரைமட்டம் ஆகின. அலுவலக அறை, பட்டாசு கோடவுன், மினி லாரி, சி.சி.டி.வி அறை சேதமடைந்தன.
சாத்துார், சிவகாசி, வெம்பக்கோட்டை, விருதுநகர் பகுதியில் இருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தன. 8 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை. சாத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.