/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கொளுத்தும் வெயில்: தகிக்கும் வனம்
/
கொளுத்தும் வெயில்: தகிக்கும் வனம்
ADDED : ஆக 21, 2025 11:49 PM
வத்திராயிருப்பு: ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த சில நாட்களாக கொளுத்தும் வெயிலால் வனப்பகுதி தகித்து செடி, கொடிகள் காய்ந்து சருகாகி தீப்பிடித்து எரிவதால் அதனை அணைக்க வனத்துறையினர் பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் போதியளவிற்கு மழை பெய்யாமல் நீர் வரத்து ஓடைகள் வறண்டு காணப்படுகிறது. நகர் பகுதியில் காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை மக்கள் நடந்து செல்ல கூட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் காணப்படுகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை வனப் பகுதியில் வெயிலின் தாக்கம் கூடுதலாகி செடி, கொடிகள் பசுமையை இழந்து காய்ந்து சருகாகி காணப்படுகிறது. இதனால் கடந்த ஆடி அமாவாசை நாள் முதல் தற்போது வரை சதுரகிரி மலைப் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டு வருகிறது. இதனை வனத்துறையினர் போராடி அணைத்தாலும் அடுத்த நாளும் தீப்பிடித்து விடுவதால் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். மலைப்பகுதியில் மழை பெய்தால் மட்டுமே இதற்கு தீர்வு கிடைக்கும் என வனத்துறையினர் கூறுகின்றனர்.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்க படாத நிலையில் நேற்று காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

