/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம்
/
பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம்
ADDED : ஜூலை 04, 2025 02:46 AM
சிவகாசி: மாவட்டத்தில் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் ரோடு சேதம் அடைந்திருப்பதால் விபத்து காலங்களில் மீட்பு பணியில் சிரமம் ஏற்படுகிறது. ஆலை உரிமையாளர்கள், உள்ளாட்சி நிர்வாகங்கள் ரோடு வசதி ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் 1080 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இவைகளில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகள் மெயின் ரோட்டில் இருந்து விலகி நகருக்கு வெளியே காட்டுப் பகுதியில் தான் அமைந்துள்ளன. சிவகாசி பகுதியில் நாரணாபுரம், அனுப்பன்குளம், மாரனேரி, வெம்பக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளுக்கு செல்ல முறையான ரோடு வசதி இல்லை.
முட்புதர்களுக்கு இடையே சிறிய மண் பாதை மட்டுமே உள்ளது. சிறிய மழை பெய்தாலும் தொழிலாளர்களை ஏற்றி வரும் பட்டாசு ஆலை வாகனமே செல்ல முடியாது. பாதை முழுவதும் சகதியாக மாறி விடுகிறது. பட்டாசு ஆலைகளில் எப்போதாவது எதிர்பாராமல் துரதிஷ்டவசமாக விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. அது போன்ற காலங்களில் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபதில் சிரமம் ஏற்படுகிறது.
சமீபத்தில் சிவகாசி அருகே சின்ன காமன்பட்டி பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. மெயின் ரோட்டில் இருந்து 3 கிலோமீட்டர் துாரத்தில் உள்ள இந்த ஆலைக்குச் செல்ல ரோடு வசதி இல்லை. முழுவதும் மண் பாதையாக சேதமடைந்த இந்த ரோட்டில் ஆம்புலன்ஸ், தீயணைப்பு அதிகாரிகள் வாகனங்கள் சென்று வருவதில் பெரிதும் சிரமம் ஏற்பட்டது. மூன்று கிலோமீட்டரை கடக்க 30 நிமிடம் ஆனது.
இதனால் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்டது. கடந்த காலங்களிலும் சில பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்ட போது மழை பெய்து பாதை சகதியாக மாறியதால் உடனடியாக மீட்பு பணிகளை மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் ஏற்படும் தாமதத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
எனவே காட்டுப் பகுதிக்குள் உள்ள பட்டாசு ஆலைகளுக்கு வாகனங்கள் சென்று வருவதற்கு ஏற்றார் போல ரோடு வசதியை பட்டாசு ஆலை உரிமையாளர்கள் அமைக்க வேண்டும். உள்ளாட்சி நிர்வாகங்கள் இதனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.