/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஆபத்து; பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக எரிப்பது குறித்து நடவடிக்கை தேவை
/
ஆபத்து; பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக எரிப்பது குறித்து நடவடிக்கை தேவை
ஆபத்து; பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக எரிப்பது குறித்து நடவடிக்கை தேவை
ஆபத்து; பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக எரிப்பது குறித்து நடவடிக்கை தேவை
ADDED : ஜன 24, 2025 04:19 AM
மாவட்டத்தில் சிவகாசி, விருதுநகர், சாத்துார், வெம்பக்கோட்டை சுற்றுப்பகுதியில் நாக்பூர், சென்னை, டி.ஆர்.ஓ., உரிமை பெற்ற 1080 பட்டாசு ஆலைகள் இயங்குகின்றன. எந்த உரிமம் பெற்று இருந்தாலும் பட்டாசு ஆலை அமைக்கும் போது அதன் வளாகத்திலேயே பட்டாசு கழிவுகளை எரிப்பதற்கு தனியாக குழி அமைக்க வேண்டும். இதனை சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்திருக்க வேண்டும் .இதில்தான் பட்டாசு கழிவுகளை கொட்டி பாதுகாப்பாக எரிக்க வேண்டும். பட்டாசு ஆலையில் இந்த பாதுகாப்புக் குழி குறித்து ஆய்வு செய்து உறுதிப்படுத்தப் பின்னரே ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்படும்.
பெரும்பான்மையான பட்டாசு ஆலைகளில் அதன் கழிவுகளை ஆலை வளாகத்தில் உள்ள குழியில் பாதுகாப்பாக போட்டு எரிக்காமல் வெளியில் பொது இடங்களிலும், ரோட்டோரங்களிலும்  கொட்டி விடுகின்றனர். இதனால் அவ்வப்போது எதிர்பாராமல் வெடி விபத்து ஏற்படுகின்றது.
கடந்த  சில மாதங்களுக்கு முன்   செங்கமலப்பட்டியில் விளையாட்டு மைதானம் அருகே பட்டாசு கழிவுகள் கொட்டப்பட்டு இருந்தது. இதன் அருகே அமர்ந்திருந்த வாலிபர்கள் எதிர்பாராமல் தீ வைத்த போது கழிவுகள் தீப்பற்றி வெடி விபத்து ஏற்பட்டு காயமடைந்தனர்.
இதேபோல் வச்சகாரப்பட்டியில் சிறுநீர் கழிப்பதற்காக ஒதுங்கிய நபர் பட்டாசு கழிவு வெடித்து காயமடைந்தார். இதுபோல் அவ்வப்போது பொது இடங்களில் கொட்டப்படும் பட்டாசு கழிவுகளால் வெடி விபத்து ஏற்பட்டு பலரும் காயம் அடைகின்றனர். சிறுவர்கள் விளையாட்டுத்தனமாக இதில் தீயிட்டு காயம் அடைந்த சம்பவமும் நடந்துள்ளது.
பட்டாசு ஆலையின் வளாகத்திற்குள் பாதுகாப்பாக கழிவுகளை எரிக்க வேண்டும் என விதிமுறை இருந்தும் ஒரு சில ஆலைகளில்  இந்த விதி பின்பற்றப்படுவதில்லை. அதிக ஆட்கள் வைத்து மரத்தடியில் பட்டாசு தயாரிப்பது உள்ளிட்ட விதி மீறல்களை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். அதேபோல் பட்டாசு கழிவுகளை பாதுகாப்பாக எரிப்பது குறித்தும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

