/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
வீடுகள் தோறும் மரம் வளர்ப்பில் ஆர்வம்
/
வீடுகள் தோறும் மரம் வளர்ப்பில் ஆர்வம்
ADDED : டிச 16, 2024 05:22 AM

சாத்துார் மக்கள் வீடுகள் தோறும் மரம் வளர்ப்பதில் ஆர்வமாக உள்ளனர்.
சிதம்பரம் நகர், தில்லை நகர், பெரியார் நகர், அண்ணா நகர் பகுதிகளில் வீடுகள் தோறும் மரங்கள் வளர்க்கப்பட்டு உள்ளன. நகரில் மெயின் ரோடு விரிவாக்க பணியின் போதும் நான்கு வழிச்சாலை விரிவாக்கப் பணியின் போதும் 100 ஆண்டுகள் பழமையான புளி, வேம்பு, வாகை ஆகிய மரங்கள் வெட்டி அகற்றப்பட்டன.
ரோட்டின் ஓரத்தில் மரங்கள் இல்லாத நிலையில் ஊர் வெறிச்சோடியது. இந்நிலையில் மரங்களின் அவசியம் அறிந்து மக்கள் தங்கள் வீடுகள் தோறும் மரம் வளர்ப்பதில் ஆர்வமுடன் ஈடுபட்டனர். தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் இளைஞர்களும் எடுத்த பெரும் முயற்சியால் மக்களுக்கு இலவச மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
தற்போது இந்த நகர் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வரிசையாக வளர்ந்துள்ளது. இதேபோன்று தற்போது புதியதாக உருவாகி வரும் நகரங்களிலும் மக்கள் ஆர்வமுடன் மரங்கள் வளர்த்து வருகின்றனர்.இதற்கு முன்னோடியாக சாத்துார் சிதம்பரம் நகரில் 40 ஆண்டுகளுக்கு முன்பே வீடுகளுக்கு முன்பு மரங்களை வளர்த்து சாதனை புரிந்துள்ளனர்.
பல ஆண்டுகள் பழமையான இந்த மரங்கள் தற்போது ஓங்கி உயர்ந்து வளர்ந்து நிழல் தருவதோடு அந்த பகுதியே குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.மக்கள் ஒவ்வொருவரும் இயற்கையை காப்பாற்றும் வகையில் தாங்களாக முன்வந்து மரங்கள் வளர்த்தால் அனைத்து நகரங்களும் மாசில்லா நகரங்கள் ஆகும் என்பதில் சந்தேகம் இல்லை.