/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கண்மாய்களை சீரமையுங்க: விவசாயிகள் கோரிக்கை
/
கண்மாய்களை சீரமையுங்க: விவசாயிகள் கோரிக்கை
ADDED : மே 16, 2025 02:54 AM
மாவட்டத்தில் விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்துார், அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்காச்சோளம், நெல், மிளகாய், வாழை, கரும்பு, கத்தரி, பருத்தி, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு பயிர்கள் விவசாயிகள் பயிரிடுகின்றனர். இவற்றில் பெரும்பான்மையான பகுதிகளில் பயிர்கள் கண்மாய் பாசனத்தை நம்பியே பயிரிடப்படுகின்றது.
மாவட்டத்தில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான 342 கண்மாய்கள், ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான 712 கண்மாய்கள் உள்ளன. கடந்த மழை சீசனில் பெரும்பான்மையான கண்மாய்களுக்கு தண்ணீர் வந்தும் பெரும்பாலானவற்றின் கரைகள் பலவீனமாகவும், மடைகள் சேதம் அடைந்து இருப்பதாலும் தண்ணீர் தேங்காமல் வீணாக வெளியேறிவிட்டது.
கடந்த காலங்களில் சிவகாசி, விருதுநகர், காரியாபட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்து கண்மாய்க்கு தண்ணீர் வந்தும் தேங்காமல் வெளியேறிவிட்டது. மாவட்டத்திலுள்ள பெரும்பான்மையான கண்மாய்கள் இதே நிலையில் தான் உள்ளது. இதனால் மழை பெய்து தண்ணீர் வந்தும் விவசாயத்திற்கு பயன்படுவதில்லை என விவசாயிகள் புலம்புகின்றனர்.
ஒரு சில பகுதிகளில் கண்மாய் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறி விவசாய நிலத்திற்கு பாய்ந்து பயிர்கள் அழிந்த நிலையும் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் கண்மாய்களில் கரைகள் உடையும்போதும் , மடைகள் சேதம் அடையும்போதும் இவைகள் அனைத்துமே தற்காலிகமாக மட்டுமே சரி செய்யப்படுகின்றது. நிரந்தரமாக சரி செய்வதில்லை. இதனால் அடுத்த மழைக்காலங்களில் மீண்டும் தண்ணீர் வீணாகி விடுகின்றது.
தற்போது தென்மேற்கு பருவமழை துவங்க உள்ளது. எனவே சேதம் அடைந்த கண்மாய்களின் கடைகள், மடைகள் குறித்து பொதுப்பணி துறையும், ஊராட்சி ஒன்றிய நிர்வாகமும் ஆய்வு செய்து உடனடியாக சரி செய்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.