/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு
/
சட்டவிரோதமாக பட்டாசுகள் தயாரிப்பு
ADDED : ஜன 26, 2026 05:26 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துார் அருகே அயன் கரிசல்குளத்தில் எலுமிச்சை தோட்டத்தில் சட்ட விரோதமாக பட்டாசு தயாரித்த உரிமையாளர் உட்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். 22 பெட்டிகளில் இருந்த பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சிவகாசி, வெம்பக்கோட்டை, திருத்தங்கல் பகுதிகளில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிப்பு தொடர்பாக போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அப்பகுதிகளைச் சேர்ந்த நபர்கள் தற்போது நத்தம்பட்டி, வத்திராயிருப்பு பகுதிகளில் உள்ள தோப்புகளில் சட்ட விரோதமாக பட்டாசுகள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அயன் கரிசல்குளத்தில் மதுரையைச் சேர்ந்த முத்துச்சாமி என்பவருக்கு சொந்தமான எலுமிச்சை தோட்டத்தில் ஒரு கும்பல் சட்ட விரோதமாக பட்டாசுகளை தயார் செய்து வந்ததுடன் வெடி மருந்துகளையும் சேமித்தும் வைத்திருந்தனர். இதுகுறித்து அப்பகுதி வி.ஏ.ஓ. செந்தில்மாயன் தோப்பை ஆய்வு செய்தபோது, 22 அட்டைப்பெட்டிகளில் பேன்சி வெடிகளும், பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் 2 கிலோ வெடி மருந்தும், அட்டைக் குழாய்களும் இருந்தது தெரியவந்தது.
வி.ஏ.ஓ., புகாரில் தோப்பின் உரிமையாளர் முத்துச்சாமி, சிவகாசியைச் சேர்ந்த தாஸ், ராஜ்குமார், கருப்பசாமி, மற்றொரு கருப்பசாமி, பொன்னுஇருளப்பன், வீரப்பெருமாள், செல்வம், ராஜாங்கம் ஆகியோர் மீது நத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

