ADDED : நவ 21, 2024 04:08 AM

சிவகாசி: சிவகாசி பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் நடமாடும் நாய்களால் பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகாசி பிள்ளையார் கோயில் பஸ் ஸ்டாப், போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றன. இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்களை நாய்கள் விரட்டி கடிக்கின்றது. தவிர பஸ் ஸ்டாப்பில் காத்திருக்கும் பயணிகளையும் நாய்கள் விட்டு வைப்பதில்லை. டூவீலரில் செல்பவர்களை விரட்டும் போது அவர்கள் தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்குகின்றனர்.
இதேபோல் சிவகாசி ரத வீதிகள், பழைய விருதுநகர் ரோடு, பி.எஸ்.ஆர்., ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிக அளவில் நடமாடுகின்றன. சிவகாசி விஸ்வநத்தம் ரோட்டில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக நாய்கள் கருத்தடை அறுவை சிகிச்சை மையம் அமைக்கப்பட்டது. இந்த கருத்தடை அறுவை சிகிச்சை மையம் செயல்படாததால் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
மாநகராட்சியில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அடையாளம் காணப்பட்டு தனியார் அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய நிதி ஒதுக்கப்பட்டு மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இத்திட்டம் அப்படியே கிடப்பில் போடப்பட்டு விட்டது.
இதனால் ரோட்டில் சுற்றி திரியும் நாய்களால் விபத்து ஏற்பட்டு மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே தெரு நாய் கருத்தடை அறுவை சிகிச்சை மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து நாய்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.