ADDED : செப் 25, 2024 03:18 AM
விருதுநகர், : விருதுநகரில் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் பதிவு செய்யும் வகையில், காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் செப். 20 முதல் அக். 28 வரை நடக்க உள்ளது என கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு: காப்பீட்டு திட்ட பயனாளி குடும்பத்திற்கு ஓராண்டிற்கு ரூ.5 லட்சம் வரை அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட தனியார், அரசு மருத்துவமனைகளில் எவ்வித கட்டணமுமின்றி சிகிச்சை பெறலாம்.
மாவட்டத்தில் விடுபட்ட பயனாளிகளுக்கு காப்பீட்டு திட்ட அட்டை பதிவு செய்யும் சிறப்பு முகாம் கிராமம் வாரியாக செப்.20 முதல் அக்.28 வரை ஊராட்சி அலுவலகங்களில் வைத்து நடக்க உள்ளது.
இதுவரை பதிவு செய்யாமல் இருப்பவர்கள் கலந்து கொண்டு, பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமிற்கு வருவோர் ரேஷன் கார்டு, குடும்ப உறுப்பினர்களின் ஆதார் அட்டை நகல், எடுத்து வர வேண்டும்.
விவரங்களுக்கு 73730 04974 என்ற அலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம், என்றார்.