பலமிழந்த கரைகள், சேதமான மடைகள், சீமை கருவேலமரம் ஆக்கிரமிப்பு:வேதனையில் ஓட்ட கண்மாய் விவசாயிகள்
பலமிழந்த கரைகள், சேதமான மடைகள், சீமை கருவேலமரம் ஆக்கிரமிப்பு:வேதனையில் ஓட்ட கண்மாய் விவசாயிகள்
UPDATED : ஆக 12, 2026 07:43 PM
ADDED : ஆக 12, 2026 07:34 PM
திருச்சுழி:திருச்சுழி அருகே ஓட்ட கண்மாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி தண்ணீர் வரத்து இல்லாமல் வறண்டு போனதால் குடிநீர், விவசாயம் பாதிப்பு அடைந்துள்ளது.
திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த ஆர்.கல்லுமடம் ஊராட்சிக்கு உட்பட்டது இறைசின்னம்பட்டி. இங்குள்ள ஓட்ட கண்மாய் சுமார் 29 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. முன்பு, விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்பட்டு வந்தது. கம்பு, பருத்தி, சோளம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டனர். கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. கால்நடைகளுக்கும் பயனுள்ளதாக இருந்தது.
நாளடைவில் கண்மாய் பராமரிப்பு இல்லாமல் போனது. ஊராட்சி நிர்வாகமும் கண்மாயை தூர் வார எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கண்மாயில் தண்ணீர் வரத்து குறைந்து போய், 4 ஆண்டுகளாக வறண்டு போய் உள்ளது. கரைகள் பலமிழந்தும், 2 மடைகளும் பழுதடைந்து, சிதைந்து கிடக்கிறது. சீமை கருவேல மரங்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளது. கண்மாயை முற்றிலும் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தியும், மடைகளை சரி செய்ய கோரியும் மக்கள் பல முறை கோரிக்கை வைத்தும் அரசு கண்டு கொள்ளவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் கண்மாய் காணாமல் போய் விடும் நிலையில் உள்ளது.
* பலமிழந்த கரைகள்
முனியசாமி, விவசாயி : ஓட்ட கண்மாயின் கரைகள் பலமிழந்து போய் விட்டது. கரைகளை பலப்படுத்தி, கண்மாயை தூர் வார வேண்டும். பல ஆண்டுகள் பராமரிப்பு இன்று போனதால் மண் மேவியுள்ளது. விவசாயிகளின் நலன் கருதி கண்மாயை பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* பழுதாகி போன மடைகள்
அய்யனார், விவசாயி : கண்மாய் வறண்டு போனதால் நாங்கள் விவசாயம் செய்வதை விட்டு விட்டோம். கண்மாயின் தெற்கு மடை சேதமடைந்து கிடக்கிறது. வடக்கு மடை முட்புதர்கள் வளர்ந்து பழுதாகி உள்ளது. மடைகளை சரி செய்ய வேண்டும்.
* விவசாயம், குடிநீர் பாதிப்பு
ராஜாகனி , விவசாயி : பல ஆண்டுகளாக ஒட்ட கண்மாய் வறண்டு கிடக்கிறது. மழை பெய்தாலும் தண்ணீர் வருவது இல்லை. இதனால், விவசாயம் செய்ய முடியாமலும், குடிநீருக்கும் தட்டுப்பாடாகவும் உள்ளது. கண்மாய் வறண்டு போனதால் நிலத்தடி நீர் வெகுவாக குறைந்து விட்டது.
