/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ஊருணியில் கழிவு நீர், மின் விளக்குகள் பற்றாக்குறை பரிதவிப்பில் மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள்
/
ஊருணியில் கழிவு நீர், மின் விளக்குகள் பற்றாக்குறை பரிதவிப்பில் மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள்
ஊருணியில் கழிவு நீர், மின் விளக்குகள் பற்றாக்குறை பரிதவிப்பில் மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள்
ஊருணியில் கழிவு நீர், மின் விளக்குகள் பற்றாக்குறை பரிதவிப்பில் மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள்
ADDED : மே 13, 2025 06:53 AM

விருதுநகர் : ஊருணியில் கழிவு நீர் கலந்து பச்சை நிறத்தில் மாறி தண்ணீர், மின் விளக்குகள் பற்றாக்குறை, தெருக்களில் வாறுகால் இல்லை, குடிநீர் கிணற்றை சுற்றி சுகாதாரக்கேடு, கண்மாய் ஆக்கிரமிப்பு உள்பட பல பிரச்னைகளால் பரிதவிக்கின்றனர் மெட்டுக்குண்டு ஊராட்சி மக்கள்.
விருதுநகர் ஒன்றியத்திற்கு உட்பட்ட மெட்டுக்குண்டு ஊராட்சியில் மெட்டுக்குண்டு, பொட்டல்பட்டி, அரசகுடும்பன்பட்டி, இந்திரா காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்ளது. இங்குள்ள 550 வீடுகளில் 1500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இந்த ஊராட்சியில் உள்ள தெருக்களில் வாறுகால் அமைக்கப்படாததால் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் மழைக்காலத்தில் ரோட்டில் ஆறாக ஓடுகிறது.
தெருக்களில் போதிய மின் விளக்குகள் இல்லாததால் இரவில் பணிமுடிந்து செல்பவர்கள் அச்சத்துடன் வீடு திரும்ப வேண்டியுள்ளது. மெட்டுக்குண்டு ஊருணியை சுற்றி புதிதாக சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. ஆனால் ஊருணியை துார்வாராமல் கட்டியதால் தேங்கிய கழிவு நீர் வெளியேற்றப்படாமல் மழை நீருடன் கலந்து பச்சை நிறத்தில் மாறி துார்நாற்றம் வீசுகிறது.
மேலும் குடிநீர் கிணற்றை சுற்றியுள்ள மனித கழிவுகளை சுத்தம் செய்யாததால் மக்கள் செல்வதற்கே முகம் சுழிக்கின்றனர். இந்த கிணற்றை பராமரிக்காததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. கண்மாய், அதற்கான நீர்வரத்து ஓடைகள் ஆக்கிரமிப்பிலும், முட்புதர்கள் அடர்ந்து இருப்பதால் தண்ணீர் வரத்து தடைபட்டுள்ளது.
இதனால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உண்டாகியுள்ளது. இங்குள்ள குளியல் தொட்டியை முறையாக பராமரிக்காததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதே நிலையில் சுகாதார வளாகம் இருப்பதால் திறந்த வெளி கழிப்பிடங்கள் அதிகரித்துள்ளது.
மின் விளக்குகள் தேவை
மாரிமுத்து, கூலித் தொழிலாளி: மெட்டுக்குண்டு ஊராட்சி தெருக்களில் தேவையான மின் விளக்குகள் பல ஆண்டுகளாகியும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவில் குழந்தைகளுடன் பெரியவர்கள், பெற்றோர் வெளியே செல்ல முடியாத நிலை நீடிக்கிறது.
ஊருணியை துார்வாருங்கள்
சரவணகுமார், டிரைவர்: ஊருணிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்கு முன்பு துார்வாரி சுத்தம் செய்திருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது. இதனால் தேங்கிய கழிவு நீரால் தற்போது துர்நாற்றம் வீசுகிறது.
கிணற்று பகுதி சுத்தமாக வேண்டும்
செல்வம், விவசாயி: மெட்டுக்குண்டு ஊராட்சி மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் கிணற்றை சுற்றி மனித கழிவுகள் இருக்கிறது. இப்பகுதியை சுத்தமாக வைத்திருக்க புதிதாக வேலி அமைத்து கொடுத்தால் போதுமானதாக இருக்கும்.