ADDED : ஜூலை 19, 2025 11:26 PM
ராஜபாளையம்: ராஜபாளையம் தென்றல் நகர் பகுதிக்கு 14 ஆண்டுகளுக்கு பின் மினி பஸ் வசதி தொடங்கியுள்ளதால்குடியிருப்போர் சங்க நிர்வாகிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
ராஜபாளையம் தென்றல் நகர் ரோட்டில் அம்பேத்கர் நகர், விஷ்ணு நகர், ராம்நகர், சக்தி நகர், பச்சை காலனி, மருது நகர், டீச்சர்ஸ் காலனி, திருவள்ளுவர் நகர், மருது நகர், சாஸ்திரி நகர், என 20க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளது.
இப்பகுதியில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரை வந்து செல்ல பொது போக்குவரத்திற்கு ஆட்டோவை மட்டும் நம்பி இருந்தனர். இதனிடையே 2011 வரை இயங்கி வந்த மினி பஸ் பல்வேறு அரசியல் காரணங்களால் தடைப்பட்டது.
இதனால் சமத்துவபுரம், ராஜூக்கள் கல்லுாரி போன்ற பகுதிகளில் இருந்து அதிக கட்டணத்துடன் தனியார் வாகனம், ஆட்டோ உள்ளிட்டவைகளில் சென்று வந்தனர். மக்கள் பயன்பாட்டிற்காக மினி பஸ் இயக்க தொடர் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இரண்டு நாட்களாக ரயில்வே ஸ்டேஷனில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்ட், பஞ்சு மார்க்கெட், தாலுகா அலுவலகம் வழியாக சமத்துவபுரம் மற்றும் ராஜூக்கள் கல்லுாரிக்கு மினி பஸ் சேவை இயங்க தொடங்கியுள்ளது.
கணேசன், குடியிருப்பு சங்க நிர்வாகி: நீண்ட நாள் கோரிக்கைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளது. ரயில்வே ஸ்டேஷனில் காலை 5:30 மணிக்கு துறையின் சேவை இரவு 8:00 மணி வரை ஒரு மணி நேரத்திற்கு தொடர்ச்சியாக இயங்க உள்ளது. இதனால் தென்றல் நகர் ரோட்டில் குடியிருந்து வரும் 20-க்கும் அதிகமான கிராமத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், நோயாளிகள், மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் காலை முதல் இரவு வரை தொடர்ச்சியான சேவை பெற வழி கிடைத்துள்ளது.

