/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்
/
சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்
சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்
சொத்து வரியை உயர்த்தும் நகராட்சிகள் அதிர்ச்சியில் பொதுமக்கள்
ADDED : செப் 27, 2024 02:53 AM
விருதுநகர்:அம்ரூட் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் மானிய நிதி பெற முன்னறிவிப்பின்றி சொத்து வரியை நகராட்சி அதிகாரிகள் உயர்த்தியது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் 2022--23ம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது. 600 சதுர அடி வரையுள்ள வீடுகளுக்கு 25 சதவீதம், 601-1200 வரை 50 சதவீதம், 1201 முதல் 1800 வரை 75 சதவீதம், 1801 சதுரஅடிக்கு மேல் உள்ள வீடுகளுக்கு நுாறு சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. இதையடுத்து வரி உயர்வை கைவிட கோரி பல்வேறு போராட்டங்கள் நடந்தன. ஆட்சேபனை மனுக்களை பெயரளவுக்கே பரிசீலனை செய்த நகராட்சி கமிஷனர்கள் அதனை தள்ளுபடி செய்தனர். பிறகு வரி உயர்வு அமுலுக்கு வந்தது. உயர்த்தப்பட்ட சொத்து வரிகளை மக்கள் வேறு வழியின்றி செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது போல நகராட்சி நிர்வாக இயக்குநர் அனைத்து நகராட்சி கமிஷனர்களுக்கும் ஜூலை 20ல் அனுப்பிய சுற்றறிக்கையில் மாநகராட்சி, நகராட்சிகள் மூலம் வழங்கப்படும் அடிப்படை சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பணிகளை செய்வதில் 15-வது நிதி ஆணைய மானியம் முக்கிய பங்கு பெறுகிறது எனவும், தூய்மை இந்தியா, அம்ரூத் ஆகிய திட்டங்களுக்கு மத்திய அரசின் மானிய நிதி பெற சொத்துவரியை உயர்த்தி வசூலிப்பது அவசியமானதாக உள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மாநகராட்சி, நகராட்சிகளில் சொத்து வரி விதிக்கப்பட்டுள்ளவற்றில் குறைவாக வரி விதிப்பு செய்யப்பட்ட கட்டடங்களுக்கு வரி உயர்வு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மாநகராட்சி, நகராட்சிகளில் தற்போதும் கூட ரூ.100க்கு குறைவான சொத்துவரித்தொகை உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இத்தகைய இனங்களை கள ஆய்வு செய்து சரியாக சொத்து வரி விதிப்பு செய்து வளர்ச்சி வீதத்தினை உயர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அனைத்து நகராட்சிகளிலும் ரூ.100க்கும் குறைவாக சொத்து வரி உள்ள வீடுகள் கணக்கிடப்பட்டு வருகிறது. பெரும்பாலும் இதுபோன்ற சிறிய குடிசை, ஆஸ்பெட்டாஸ் வீடுகளில் வசிப்போர் மிகவும் சாதாரண ஏழை, எளிய குடும்பங்களை சார்ந்தவர்களாக உள்ளனர். ஆனால் நகராட்சி நிர்வாகங்கள், அந்த வீட்டின் உரிமையாளர்களுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல் குறைந்தபட்சம் அரையாண்டிற்கு ரூ.500 வரை சொத்து வரியை உயர்த்தியுள்ளது. நகர்மன்றங்களிலும் எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. வீட்டின் உரிமையாளரிடம் திடீரென உயர்த்தியுள்ளதாக கூறுவதால் அவர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: 2022-23ல் சொத்து வரி கணிசமாக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் பாதிப்பே நீங்காத நிலையில் தற்போது மீண்டும் மறைமுகமாக வீட்டின் உரிமையாளர்களுக்கும், நகர்மன்றத்திற்கும் தெரியாமல் ஏழை மக்கள் வசித்து வரும் குடியிருப்புகளின் சொத்து வரியை உயர்த்துவது எந்த விதத்திலும் நியாயமல்ல. இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றனர்.