/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாயமான வரத்து ஓடைகள், ஆக்கிரமிப்பில் கால்வாய்கள்
/
மாயமான வரத்து ஓடைகள், ஆக்கிரமிப்பில் கால்வாய்கள்
ADDED : மார் 07, 2024 04:50 AM

காரியாபட்டி: காரியாபட்டி தண்டியனேந்தல் கிராமத்தில் யூனியனுக்கு சொந்தமான கண்மாய் தூர்வாரி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனதால் மண் மேவி உள்ளது. மாயமான வரத்து ஓடைகள், ஆக்கிரமிக்கப்பட்ட வரத்து கால்வாய்கள் சேதமடைந்ததால் விவசாயம் பாதிக்கப்பட்டது.
காரியாபட்டி தண்டியனேந்தல் கிராமத்தில் யூனியனுக்கு சொந்தமான கண்மாய் 80 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. 100 ஏக்கர் வரை பாசன வசதி பெற்றது. இரு மடைகள் உள்ளன. நீர் ஆதாரமாக நந்திக்குண்டு கண்மாய் நிறைந்து உபரி நீர் புளியம்பட்டி வழியாக இக்கண்மாய்க்கு வந்து சேரும். முன் நல்ல மழை பொழிவு இருந்தது. கரிசல் காட்டு பகுதியில் பெய்யும் மழை நீர் ஓடைகள் வழியாக கண்மாய்க்கு வந்து சேரும். நாளடைவில் மழை அளவு குறைந்தது. வரத்து ஓடைகள் காணாமல் போயின.
வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீர் வரத்து முற்றிலும் தடைபட்டது. அத்துடன் கண்மாய் தூர்வாரி 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகின. கண்மாய் மேடானது. கரை சேதமடைந்தது. கிடைக்கிற சிறிதளவு தண்ணீரும் வீணாக வெளியேறி விடும். சீமைக் கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்து கண்மாய் இருக்கும் இடமே தெரியாமல் உள்ளது.
வாய்க்கால்கள் சேதமடைந்தன. விவசாயம் செய்து 15 ஆண்டுகளுக்கு மேலாகின. வயல்களை பெரும்பாலானவர்கள் தரிசு நிலங்களாக போட்டனர். ஒரு சிலர் மட்டும் பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் பயிரிட்டு வருகின்றனர்.
விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கண்மாயை தூர்வாரி, வரத்துக்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

