/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
மாறுதல் அளித்தும் மாறாத ஊராட்சி செயலர்கள்
/
மாறுதல் அளித்தும் மாறாத ஊராட்சி செயலர்கள்
ADDED : ஜன 18, 2025 05:42 AM
அருப்புக்கோட்டை : மாவட்டத்தின் ஊராட்சி செயலர்கள் பணி மாறுதல் செய்து பல மாதங்களாகியும் மாறாமலேயே இருப்பதால் ஊராட்சிகளில் பணிகள் பாதிப்படைந்துள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளது. இவற்றில் 450 ஊராட்சிகள் இருக்கிறது. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஊராட்சி செயலர்கள் உள்ளனர்.
இவர்கள் ஊராட்சி தலைவரின் கீழ் பணிகளை செய்பவர். ஊராட்சியில் உள்ள குடிநீர், வாறுகால், ரோடு உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்க வரும் மனுக்களை பெறுவதற்கும் அதை சரி செய்வதற்கும் உரிய பணிகளை செய்வர்.
மாவட்டம் முழுவதும் ஊராட்சி செயலர்களுக்கு 10 மாதங்களுக்கு முன்பு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இதில் செயலர்கள் பணி மாறுதல் செய்ய விருப்பம் இல்லாமலும், மீண்டும் அதே பணியை தொடர்வதற்காக அமைச்சர்களிடம் மனு கொடுப்பதிலும் அலைகின்றனர்.
பல ஊராட்சி செயலர்கள் வேறு வழியின்றி பணி மாறுதலில் சென்று விட்டனர்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் பந்தல்குடி, செட்டிபட்டி, பாலவநத்தம் ஊராட்சிகளில் நிரந்தர செயலர்களே இல்லை.
இன்னும் சில ஊராட்சிகளில் பணி மாறுதல் செய்யாமலேயே அதே இடத்தில் இருக்கின்றனர்.
இதில் ஊராட்சி தலைவர்களின் பதவிக்காலம் ஜன.5ல் முடிவடைந்து விட்டதால், ஊராட்சி நிர்வாகப் பணிகளை செயலர்கள் தான் செய்ய வேண்டும். இவர்கள் மாறுதலுக்காக அங்கும் இங்கும் அலைவதால் ஊராட்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
ஊராட்சிகளில் குடிநீர், மோட்டார் பழுது குறித்து புகார்களை சொல்லும் பொதுமக்கள் யாரிடம் சொல்வது என தெரியாமல் அலைய வேண்டியுள்ளது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் அனைத்து ஊராட்சிகளிலும் செயலர்கள் பணியில் அமர நடவடிக்கை எடுக்க வேண்டும்.