/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
கிடப்பில் பூங்கா சீரமைக்கும் பணி
/
கிடப்பில் பூங்கா சீரமைக்கும் பணி
ADDED : பிப் 08, 2024 06:33 AM

சிவகாசி, : சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அருகே தென்றல் நகரில் உள்ள சிறுவர் பூங்காவில் பராமரிப்பு பணிகள் துவங்கிய நிலையில் கிடப்பில் போடப்பட்டதால் குடியிருப்புவாசிகள் அதிருப்தியில் உள்ளனர்.
சிவகாசி ரயில்வே ஸ்டேஷன் அருகே தென்றல் நகரில் சிறுவர் பூங்கா உள்ளது. இதில் குழந்தைகள் விளையாடும் வகையில் ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் இருந்த நிலையில் சில ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லை.
பூங்கா முழுவதும் முட்புதர்கள் சூழ்ந்து விட்டது. மேலும் பாம்பு உள்ளிட்ட விஷப்பூச்சிகளின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. இதனால் இப்பகுதி குடியிருப்புவாசிகள் பெரிதும் அவதிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு பூங்கா பராமரிக்கும் பணி துவங்கியது.
இதற்காக முட்புதர்கள் அகற்றப்பட்டு பில்லர் அமைக்கும் பணி துவங்கிய நிலையில் அடுத்த கட்டப் பணிகள் துவங்கவில்லை. இதனால் இப்பகுதி குழந்தைகள் பெரியவர்கள் ஓய்வு எடுக்க, பொழுது போக்க இடம் இன்றி சிரமப்படுகின்றனர்.
எனவே விரைவில் பூங்கா அமைக்கும் பணியை துவங்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

