/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, குடிநீருக்காக தவிக்கும் மக்கள்
/
ரோடு, குடிநீருக்காக தவிக்கும் மக்கள்
ADDED : செப் 18, 2025 06:23 AM

சாத்துார் : சாத்துார் அருகே தியாகி விஸ்வநாததாஸ் நகர் உருவாகி 15 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர் ,ரோடு, வாறு கால் உள்ளிட்ட வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
விருதுநகர் தாலுகா இ. முத்துலிங்காபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட தியாகி விஸ்வநாதர் தாஸ் நகர் எட்டூர் வட்டம் டோல்கேட் அருகில் உள்ளது.இங்கு அரசு வழங்கிய இலவச பட்டா நிலத்தில் 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். தியாகி விஸ்வநாததாஸ் நகர் உருவாகி 15 ஆண்டுகளுக்கும் மேலான நிலையில் இங்கு அடிப்படை வசதிகளான குடிநீர்,ரோடு, வாறு கால் உள்ளிட்ட வசதியின்றி மக்கள் அவதிப்படுகின்றனர்.
நகரில் ஒரே ஒரு போர்வெல் அடிகுழாய் மட்டுமே உள்ளது. குடிநீர் குழாய் பதிக்கப்படவில்லை. மக்கள் புழக்கத்திற்கு அடிகுழாயில் இருந்து தண்ணீரை பிடித்து பயன்படுத்தி வருகின்றனர். வண்டிகளில் விற்பனை செய்யப்படும் மினரல் வாட்டரை விலைக்கு வாங்கி குடிநீராக பயன்படுத்தி வருகின்றனர்.
எட்டூர் வட்டம் டோல்கேட் சிவகாசி விலக்கில் இருந்து நகருக்குள் செல்லும் ரோடு கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக கரடு முரடாக உள்ளது.
இது வழியாக நகருக்குள் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் கூர்மையான கற்கள் குத்துவதால் டயர்கள் பஞ்சர் ஆகி அவதிப்படும் நிலை உள்ளது.
இவ்வழியாக உடைகற்கள் ஜல்லிகள் ஏற்றிக் கொண்டு பல கனரக வாகனங்கள் இச்சாலை வழியாக செல்லும் நிலையில் இந்த சாலையை தார் சாலையாக மாற்றி தரக்கோரி மனு அளித்தும் இன்று வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மேலும் நகரில் இருந்து வெளியாகும் கழிவு நீர் செல்வதற்கு முறையான வடிகால் வசதி இல்லை. இதனால் காலி நிலங்களில் கழிவு நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது.
இந்தப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தெரு விளக்குகளை மர்ம நபர்கள் இரவு நேரத்தில் கல் எரிந்து உடைத்துள்ளனர். இதனால் இரவு நேரத்தில் நகர் பகுதி முழுவதும் இருள் சூழ்ந்த நிலையில் காணப்படுகிறது. இதுபோன்ற அடிப்படை வசதிகள் என்று இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.