/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரயில்வே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைக்க திட்டம்; வாகனங்கள் சோதனை முறையில் இயக்கம்
/
ரயில்வே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைக்க திட்டம்; வாகனங்கள் சோதனை முறையில் இயக்கம்
ரயில்வே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைக்க திட்டம்; வாகனங்கள் சோதனை முறையில் இயக்கம்
ரயில்வே மேம்பாலத்தில் ரவுண்டானா அமைக்க திட்டம்; வாகனங்கள் சோதனை முறையில் இயக்கம்
ADDED : அக் 08, 2025 01:17 AM

சிவகாசி; சிவகாசியில் கட்டப்பட்டு வரும் ரயில்வே மேம்பாலத்திற்கு வாகனங்கள் எளிதாக சென்று வரும் வகையில் ரவுண்டானா அமைப்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சோதனை அடிப்படையில் ரவுண்டானவை சுற்றி செல்லும் வகையில் வாகனங்கள் இயக்கப்படுகிறது.
சிவகாசி - ஸ்ரீவில்லிபுத்துார் ரோட்டில் சாட்சியாபுரம் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்கும் பணிக்கு பெரியகுளம் கண்மாய் இரட்டைப் பாலம் முதல் சாட்சியாபுரம் பஸ் ஸ்டாப் நிறுத்தம் வரை 700 மீட்டர் நீளம், 12 மீட்டர் அகலத்தில் ரூ.61.74 கோடியில் 2024 ஜூலையில் அடிக்கல் நாட்டப்பட்டது. ரயில்வே தண்டவாளத்திற்கு கிழக்கு பக்கம் 11 துாண்கள், மேற்கு பக்கம் 6 துாண்கள் என மொத்தம் 17 துாண்கள் அமைக்கப்பட்டு மேம்பாலம் கட்டுமான பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்து உள்ளது.
கடந்த மாதம் மேம்பால பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு, திட்ட காலத்துக்கு முன்னதாகவே நவ., இறுதியில் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும் , என தெரிவித்தார்.
இந்நிலையில் பெரியகுளம் கண்மாய் கரையில் மேம்பாலம் ஏறும் இடத்தில் நான்கு ரோடு சந்திப்பதால் ரவுண்டானா அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக அதிகாரிகள் ஆய்வு செய்து, 18 மீட்டர் சுற்றளவில் கனரக வாகனங்கள் எளிதில் திரும்பும் வகையில் ரவுண்டானா அமைக்க முடிவு செய்து, இரு நாட்கள் சோதனை முறையில் வாகனங்கள் அவ்வழியாக இயக்கப்படுகிறது. அதில் ஏதாவது சிரமம் இருந்தால் அப்பிரச்னை சரி செய்யப்பட்டு, அடுத்த இரு நாட்களில் ரவுண்டானா அமைக்கும் பணி தொடங்க உள்ளது.
இதுகுறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்: சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணிக்கான திட்ட காலம் பிப்., வரை உள்ள நிலையில், அனைத்து துறைகளின் ஒத்துழைப்பு காரணமாக தற்போது 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளது. ரவுண்டானா அமைக்கும் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடையும். அடுத்த மாதம் மேம்பாலம் பயன்பாட்டுக்கு வரும், என்றனர்.