விபத்தில் வார்டன் காயம்
விருதுநகர்: முத்துராமலிங்க நகரைச் சேர்ந்தவர் முனீஸ்வரன் 26. இவர் மதுரை மத்திய சிறையில் ஜெயில் வார்டனாக உள்ளார். இவர் சொந்த வேலைக்காக டூவீலரில் ஜன. 27 இரவு 7:00 மணிக்கு விருதுநகர் - சாத்துார் ரோட்டில் சென்ற போது டூவீலரில் எதிர்திசையில் வந்த கணபதி நகரைச் சேர்ந்த கருப்பசாமி 50 மோதியதில் காயமடைந்தார். பஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.
பட்டாசு பறிமுதல்
சாத்துார்: ஏழாயிரம் பண்ணை போலீசார் ரோந்து சென்றபோது அச்சங்குளம் மாரியம்மன் பயர் ஒர்க்ஸ் அருகில் காட்டுப் பகுதியில் தகரசெட்டு அமைத்து அதே ஊரைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் 42, சரவெடிகளை தயார் செய்து கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் தப்பி ஓடினார். அங்கிருந்த சரவெடி, சோல்சா வெடிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ஏழாயிரம்பண்ணை போலீசார் விசாரிக்கின்றனர்.
* சிவகாசி: சிவகாமிபுரம் காலனியைச் சேர்ந்த கனி முத்து 47, தனது வீட்டில் அருகே தகர செட்டில் அனுமதி இன்றி பூஞ்சட்டி வெடிகள் தயாரித்தார். கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து பட்டாசுகளை பறிமுதல் செய்தனர்.
முதியவர் பலி
விருதுநகர்: சூலக்கரை, இ.பி. காலனியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 74. இவர் வீட்டின் முன்பு ஜன. 21 மாலை 6:00 மணிக்கு டூவீலர் எடுக்க முயன்ற தடுமாறி கீழே விழுந்து காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவர் ஜன. 27 காலை 7:00 மணிக்கு சிகிச்சை பலனின்றி பலியானார். சூலக்கரைப் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண் சாவில் சந்தேகம்
திருச்சுழி: விருதுநகர் பாலன் நகர் முதல் தெருவை சேர்ந்தவர் பிச்சைக்கனி 51, இவரது மகள் கார்த்திகை செல்வியை 2021ல், பிள்ளையார் நத்தத்தைச் சேர்ந்த கார்த்திக் ராஜாவிற்கு திருமணம் செய்து வைத்துள்ளார். இந்நிலையில் ஜன. 27ல் காலை 10:30 மணிக்கு பிச்சை கனியிடம், அவரது உறவினர் கார்த்திகை செல்வி மூச்சு பேச்சின்றி கிடப்பதாகவும் அவரை அருப்புக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கு கூட்டி செல்வதாகவும் தகவல் கூறியுள்ளார். மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோது காரில் மகள் கழுத்தில் தூக்கு போட்ட காயத்துடன் இறந்த நிலையில் இருந்துள்ளார். தனது மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக திருச்சுழி போலீஸ் ஸ்டேஷனில் பிச்சை கனி புகார் செய்தார்.
மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து பெண் பலி
ஸ்ரீவில்லிபுத்தூர்:- ஸ்ரீவில்லிபுத்தூர் சின்ன கடை பஜாரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன். இவரது மனைவி மீனாட்சி, 55. இவரது மாமியார் கோமதி அம்மாள் சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் மூன்றாம் நாள் காரியத்திற்கு சாமி கும்பிட்டு விட்டு காக்காவிற்கு படையல் வைப்பதற்கு மாடிக்கு சென்றபோது சேலை தடுக்கி மாடிப்படியில் இருந்து தவறி உருண்டு விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் பலனில்லாமல் உயிரிழந்தார். டவுன் போலீசார் விசாரித்தனர்.