ADDED : ஏப் 07, 2025 06:39 AM

இன்றைய அறிவியல் உலகில் நவீன வசதிகளுடன் செயல்பட்டு வரும் அரசு அலுவலகங்களில் குளிர் சாதன வசதி செய்யப்பட்டிருந்தாலும் மரங்கள் தரும் இயற்கை சூழலே அங்கு பணியாற்றும் அலுவலர்களுக்கும், அங்கு வரும் மக்களுக்கும் கோடை வெயிலின் புகலிடமாக திகழ்கிறது.
இதேபோல் 50 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட அரசு அலுவலகங்கள் போதிய காற்றோட்ட வசதிகளுடன் ஜன்னல்கள் அமைக்கப்பட்டும், எளிதில் சூரிய வெளிச்சம் கிடைக்கும் வகையிலும், அலுவலகத்தை சுற்றி நூற்றுக்கு மேற்பட்ட மரங்கள் வளர்க்கப்பட்ட நிலையில் செயல்பட்டு வந்தது.
அந்த வகையில் ஸ்ரீவில்லிபுத்துாரில் 1989க்கு முன்பு வரை திறந்தவெளி மைதானமாக, அருகில் வயல்வெளி பசுமையுடன் காலி இடமாகத்தான் தற்போதைய ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா காவல் நிலையம் இருக்கும் இடம் திகழ்ந்தது. இங்கிருந்த 2 மிகப்பெரிய கிணறுகள் கோடை வறட்சியில் சுற்றி இருந்த வீடுகளுக்கு போதும் போதும் எனும் அளவிற்கு தண்ணீரை தந்தது.
பங்குனி மாத பூக்குழி திருவிழாவின் போது ஏழாம் திருநாளில் இந்த மைதானத்தில் ஏராளமான வெளியூர் பக்தர்கள் திறந்த வெளியில் இரவு தங்கி அம்மனை வழிபட்டனர்.
அத்தகைய இடத்தில் புதியதாக தாலுகா போலீஸ் ஸ்டேஷன் கட்டடம் கட்டப்பட்டு 1989ல் திறக்கப்பட்டது. அப்போது அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டு அங்கு பணியாற்றிய போலீசார்களின் முறையான பராமரிப்பால் இன்று ஸ்டேஷன் முன்பு மரங்களாக வளர்ந்து பசுமை சூழலில் காணப்படுகிறது. அதிலும் தற்போது கொளுத்தும் கோடை வெயிலுக்கு மனித சமுதாயத்திற்கு இடம் தரும் புகலிடமாக திகழ்கிறது.
நாம் ஒவ்வொருவரும் தெருக்கள் பஜார் வீதிகள் அரசு அலுவலகங்கள் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பாதுகாப்பது எதிர்கால தலைமுறைக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். தற்போதைய தாலுகா போலீஸ் ஸ்டேஷன் போல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் அதிக மரக்கன்றுகளை நட்டு வளர்த்து பசுமை அலுவலகங்களை உருவாக்க வேண்டும்.
- -முருகதாஸ், ரோட்டரி சங்க தலைவர்.
இன்று பல்வேறு அரசு அலுவலகங்கள் நவீன கட்டட முறையில் கட்டப்பட்டிருந்தாலும் அந்த அலுவலகத்தை சுற்றியுள்ள மரங்களின் நிழல்களே மக்களுக்கு பேருதவியாக இருக்கிறது. இத்தகைய மரங்களை உருவாக்க மரக்கன்றுகள் நட்டு வளர்ப்பதில் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
- முருகேசன், நிர்வாகி, மகாத்மா வித்யாலயா.

