UPDATED : மே 29, 2026 05:29 PM
ADDED : மே 29, 2026 05:21 PM
சாத்துார் வடக்கு ரதவீதியில் ஆக்கிரமிப்பு கடைகளால் நெரிசல
* தினமும் அவதிபடும் மக்கள்: பாராமுகத்தில் அதிகாரிகள்
சாத்துார், மே 30-
சாத்துார் வடக்கு ரத வீதியில் கடைகள் ஆக்கிரமிப்புக்களை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் பராமுகமாக இருந்து வருவதால் மக்கள் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
சாத்துார் வடக்குரத வீதி நகரின் மையப்பகுதியாகும். நாடார் கீழத்தெரு, செட்டியார் தெரு, பாரதிநகர், அருந்ததியர் காலனி, செக்கடி தெரு, தேரடித்தெரு, ஆகிய குடியிருப்பு பகுதிகள் சந்திக்கும் முக்கிய வீதி.
இதே பகுதியில் தனியார் மருத்துவமனைகள், திருமண மண்டபங்கள், திரையரங்கம், வர்த்தக நிறுவனங்கள், காய்கறி கடைகள், படக்கடைகள், ஓட்டல்கள், அம்மா உணவகம் அமைந்துள்ளது.
இதனால் காலை முதல் மாலை வரை மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாக மாறி உள்ளது. அரசியல் கட்சிகளும் தங்கள் கட்சித் தலைவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தவும் பிறந்தநாள் என்றால் மக்களுக்கு அன்னதானம் இனிப்பு வழங்குவதும் , ஆர்பாட்டங்கள், கூட்டங்களும் இந்த வீதியில் நடத்துகின்றனர்.
புதிய கட்டடங்களும் கட்டப்பட்டு வரும் நிலையில் இந்தப் பகுதியில் சாலை ஓரத்தில் அதிக அளவில் ஆக்கிரமித்து கடைகள் போடப்பட்டுள்ளது.
சாலை வரை நீண்டிருக்கும் ஆக்கிரமிப்பு கடைகளால் மக்கள் சாலை ஓரம் நடந்து செல்ல முடியாமல் சாலையில் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
இந்த வீதியில் உள்ள காய்கனி மார்க்கெட் பகுதிக்கும் அரிசி கடைகளுக்கும் பர்னிச்சர் கடைகளுக்கும் காலை ,மாலை நேரங்களில் சரக்குகள் கொண்டு வரும் லாரிகள் நிறுத்தி வைக்கப்படுவதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
முக்கு ராந்தல் துவங்கி செக்கடி தெரு வரை டூவீலர்களில் செல்பவர்கள் மட்டுமின்றி நடந்து செல்பவர்களும் நெரிசலில் சிக்கி அவதிப்படுகின்றனர்.
ஜூன் 4 ல் பள்ளிகள் திறக்கப்படும் போது இந்த சாலையில் மேலும் போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கும் சூழல் உள்ளது.
வடக்குரத வீதி முக்கு ராந்தல் சந்திப்பில் மினி பஸ் , ஆட்டோக்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்லும் போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்தப் பகுதியில் டூவீலர்கள் எதிரெதிர் திசையில் வந்து மோதி பலர் கீழே விழுந்து படுகாயம் அடைந்து வருகின்றனர்.
போக்குவரத்து போலீசார் கனரக வாகனங்கள் இந்த பகுதியில் வந்து செல்ல நேர கட்டுப்பாடு விதித்துள்ளனர்.ஆனால் இதனையும் மீறி கனரக வாகனங்கள் காலை மாலை நேரங்களில் இந்த பகுதிக்குள் வந்து செல்வதால் நெரிசல் அதிகரித்து வருகிறது.
கடந்த காலங்களில் நகராட்சி நிர்வாகம் அடிக்கடி இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்டு வந்தது. தற்போது கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்த பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடைபெறவில்லை.
இதனால் நெரிசல் ஏற்பட்டு மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.பள்ளி திறப்பதற்கு முன்பாக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி போக்குவரத்தை சீர்படுத்திட வேண்டும் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
டூவீலர்கள் ரோட்டில்நிறுத்துவதால் பாதிப்பு
வடக்கு ரத வீதியில் காளியம்மன் கோயில் முதல் தேவர் மகால் வரை ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் உள்ளன. இந்தக் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள் தாங்கள் கொண்டு வரும் டூ வீலர்களையும் கார்கள் , டூவீலர்களை ரோட்டில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் எதிரெதிரில் வாகனங்கள் வரும்போது விலகிச் செல்ல கூட இடமின்றி அவதிப்படும் நிலை உள்ளது. ரோட்டில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இந்தப் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் இதனால் அவதிப்படுகின்றனர்.
சங்கரேஸ்வரன், சாத்துார்.
அரசியல் கட்சிகளால் பாதிப்பு
சாத்துாரில் அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம், தர்ணா , பொதுக்கூட்டம் நடத்துவதற்கு வடக்கு ரத வீதியில் போலீஸ் அனுமதி வழங்கப்படுகிறது.ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட இடத்தில் அவர்கள் நிகழ்ச்சிகளை செய்யாமல் முக்குராந்தல் பகுதியில் ஆர்ப்பாட்டம் தர்ணாவில் ஈடுபடுகின்றனர். இதனால் வடக்கு ரத வீதிக்கு செல்பவர்கள் மட்டுமின்றி முக்குராந்தல் சந்திப்பில் மெயின் ரோட்டில் செல்பவர்களும் நெரிசலில் சிக்கி பாதிக்கப்படுகின்றனர். ஆர்ப்பாட்டம் தர்ணாவின் போது மெயின் ரோட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருக்கும் நிலை உள்ளது. ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் நின்று செல்ல வேண்டிய நிலை உள்ளது.இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்திக், சாத்துார்.
தீர்வு
வடக்குரத வீதியில் நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவதோடு, டூவீலர்கள் கார்கள் நிறுத்துவதற்கு உரிய இடத்தை ஒதுக்கி தர வேண்டும்.ஆக்கிரமிப்பு கடைகாரர்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க இது ஒன்றே தீர்வாக இருக்கும்.
(சார், படம் தனி பைலாக அனுப்புகிறேன்)
