ADDED : ஏப் 06, 2025 06:09 AM
ராஜபாளையம் : ராஜபாளையம் சுற்று பகுதியில், 24 மணி நேரத்திற்குள் ஆறு மாணவர்கள் உட்பட 64 பேர் நாய்க்கடி வாங்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், வ.உ.சி நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்த ஒரு நாய் விரட்டி கடித்ததில், மூன்று பள்ளி மாணவர்கள் உட்பட 30 பேர் சத்திரப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர்.
நேற்று காலை, ராஜபாளையம் பழைய பஸ் ஸ்டாண்ட், சங்கரன்கோவில் முக்கு, காந்தி சிலை பகுதிகளில் பஸ்சுக்காக நின்றிருந்தவர்கள், கூலி தொழிலாளர்கள், மாணவர்கள் உட்பட 34 பேரை ஒரு வெறி பிடித்த நாய் துரத்தி துரத்தி கடித்துள்ளது.
அவர்கள், ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் பாபுஜி கூறுகையில், ''நாய்க்கடி வாங்கிய 64 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி, நோய் எதிர்ப்பு சக்தி ஊசி செலுத்தப்பட்டுள்ளது.
மருத்துவ குழுவினர் முகாமிட்டு ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்,'' என்றார்.