ADDED : அக் 01, 2024 11:49 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்: புரட்டாசி மாதத்தில் மழை பெய்ய துவங்கி இருப்பதால் மக்காச்சோள சாகுபடிக்கு தங்கள் வயல்களை உழுது போட்டு காத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஒன்றிய பகுதிகள், ஆலங்குளம், வெம்பக்கோட்டை, சாத்தூர், இருக்கன்குடி, பாலநத்தம், பந்தல்குடி, நரிக்குடி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி பகுதி விவசாயிகள் ஆண்டு தோறும் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்து வருவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டும் வடகிழக்கு பருவ மழையை எதிர்பார்த்து பருத்தி மக்காச்சோளம் சாகுபடிக்காக தங்கள் விளைநிலங்களை ஏராளமான விவசாயிகள் உழவு செய்து பண்படுத்தி தயார் நிலையில் வைத்திருந்தனர். ஆனால், போதிய அளவிற்கு தென்மேற்கு பருவ மழை பெய்யாத நிலையிலும் , வடகிழக்கு பருவமழையும் தள்ளிப் போனதாலும் விருதுநகர் மாவட்ட விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் இருந்தனர்.
இந்நிலையில் கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன் கோவில், சிவகாசி, ராஜபாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வெயிலின் தாக்கம் குறைந்து காணப்படுகிறது. இதனால் மக்காச்சோளம் சாகுபடிக்கு விவசாய நிலங்களை தயார் படுத்தி வைத்திருந்த விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

