ADDED : ஜன 23, 2024 04:05 AM

விருதுநகர்: மாவட்டத்தில் அயோத்தி ராமர் கோயிலில் பிரான பிரதிஸ்டை எனும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு விருதுநகர், சிவகாசி, ராஜபாளையம், அருப்புக்கோட்டை, காரியப்பட்டி, சாத்துார், ஸ்ரீவில்லிப்புத்துார் உள்ளிட்ட நகர் பகுதிகளிலும், அதை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளிலும் உள்ள ராமர், பெருமாள், கிருஷ்ணன் கோயில்களில் சிறப்பு வழிபாடு, அபிஷேகம், ஆராதனை, அன்னதானம் நடைபெற்றது.
* விருதுநகர் ராமர் கோயிலில் அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.
* விருதுநகர் பிராமண ஸமாஜம் சார்பில் 100 ஆண்டுகள் பழமையான ராமர், சீதை, லட்சுமணர் படங்களுக்கு மாலை அணிவித்து காலை 10:00 மணி முதல் ராம சஹஸ்ர நாமம், அர்ச்சனை, பஜனை உள்ளிட்டவை நடந்தது. ஸமாஜ வாத்தியார் சங்கர் கணேஷ் குழுவினரால் மாலை 5:30 மணி முதல் ப்ரான பிரதிஸ்டையும், வேதகோஷங்களும், ராம சஹஸ்ர நாமம், விசேஷ பூஜைகள் நடந்தது.
* விருதுநகர் முத்தால்நகரில் உள்ள ராதாகிருஷ்ணன் கோயிலில் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஸ்டையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு, அன்னதானம் வழங்கப்பட்டது.
அருப்புக்கோட்டை
ஆயிரம் கண் மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் அபிஷேக ஆராதனைகள் நடத்தி மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பா.ஜ.,வினர் செய்தனர்.
* அருப்புக்கோட்டை காந்திநகர் சந்திப்பில் மக்களுக்கு பொங்கல், பிரசாதம் வழங்கப்பட்டது. கஞ்சநாயக்கன்பட்டி ரேணுகா தேவி கோயிலில் குத்து பூஜை நடந்தது.
ஸ்ரீவில்லிபுத்தூர்
திருமுக்குளம் ஆஞ்சநேயர் கோயிலில் பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர் சோலையப்பன் தலைமையில் பஜனை வழிபாடு நடந்தது.
* ஆண்டாள் கோயிலில் மேற்கு மாவட்ட தலைவர் சரவண துரைராஜா தலைமையில் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடந்தது. இனிப்புகள் வழங்கப்பட்டது.
* பெருமாள் பட்டி காளியம்மன் கோயிலில் ஆர்.எஸ்.எஸ். சார்பில் பரியாவரன் பொறுப்பாளர் மாரிச்சாமி தலைமையில் சிறப்பு பூஜைகள் நடந்தது. நகரில் பல்வேறு தெருக்கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. வீடுகளில் பெண்கள் விளக்கேற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகாசி
அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செங்கமல நாச்சியார்புரம் கண்ணன் கோயிலில் பா.ஜ., சார்பில் கும்பாபிஷேகம் நேரடி ஒளிபரப்பு, அன்னதானம் நடந்தது. நிர்வாகிகள் பாலகணேஷ், வெங்கடேஷ், விஜயராகவன், லட்சுமி நரசிம்மன், கிரி, சிவ செல்வராஜ் கட்சியினர் கலந்து கொண்டனர்.
* அதேபோல் ஈஞ்சார் ராமர் கோயிலில் பொங்கல் வைத்து பூஜை செய்யப்பட்டது.
காரியாபட்டி
காரியாபட்டி அச்சங்குளத்தில் சீதாராமர் கோயிலில் உள்ள ராமர், சீதா, லட்சுமணன், அனுமனுக்கு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டது.

