/
உள்ளூர் செய்திகள்
/
விருதுநகர்
/
ரோடு, குடிநீர் தொட்டி சேதம், கழிவுநீர் தேக்கம்
/
ரோடு, குடிநீர் தொட்டி சேதம், கழிவுநீர் தேக்கம்
ADDED : ஆக 09, 2025 11:33 PM

சிவகாசி: ரோடு, மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம், கழிவுநீர் தேக்கம் என திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதி மக்கள் எண்ணற்ற பிரச்னைகளில் சிக்கித் தவிக்கின்றனர்.
சிவகாசி அருகே திருத்தங்கல் பழைய வெள்ளையாபுரம் ரோடு பகுதியில் ரோடு சேதம், கழிவுநீர் தேக்கம் முக்கிய பிரச்னையாக உள்ளது. இப்பகுதியில் உள்ள கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. ஆனால் ஆங்காங்கே அவ்வப்போது குழாய் சேதம் அடைந்து குடிநீர் வீணாகிறது. மெயின் ரோட்டில் வாறுகால் துார்வாரப்படாததால் மழைக்காலங்களில் கழிவு நீர் ரோட்டில் ஓடுகின்றது.
மாநகராட்சி மண்டல அலுவலகம் அருகே மேல்நிலை குடிநீர் தொட்டி சேதம் அடைந்துள்ளது. இதனை சீரமைக்க வேண்டும். இப்பகுதியில் உள்ள வேன் ஸ்டாண்ட் அருகே கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் ஏற்படுவதோடு சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது. போலீஸ் ஸ்டேஷனில் இருந்து பாண்டியன் நகர், சத்யா நகர் செல்லும் ரோடு சேதம் அடைந்துள்ளது.
பல்லாங்குழியான ரோடு சசி, தனியார் ஊழியர்: அண்ணாதுரை பஸ் ஸ்டாப்பில் இருந்து தேவர் சிலை, போலீஸ் ஸ்டேஷன் வழியாக பழைய வெள்ளையாபுரம் செல்லும் ரோடு அமைக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. தற்போது போலீஸ் ஸ்டேஷன் வரையிலான ரோடு ஆங்காங்கே சேதமடைந்து குண்டும் குழியுமாக மாறிவிட்டது. மேலும் சேதமடைந்த ரோடு குறுகியதாகவும் இருப்பதால் எதிரெதிரே வருகின்ற வாகனங்கள் விலகிச் செல்ல முடியவில்லை.
சுகாதாரக்கேடு தங்கம், தனியார் ஊழியர்: இதே ரோட்டில் உள்ள செங்குளம் கண்மாய் அருகே பெரிய கிடங்கு உள்ளது. இப்பகுதியில் வாறுகால் இல்லாததால் பாண்டியன் நகர், சத்யா நகரின் மொத்த கழிவுகளும் இங்கு வந்து தேங்குகின்றது. இதில் பிளாஸ்டிக் கழிவுகளும் கொட்டப்பட்டுள்ளது. அருகிலேயே மாநகராட்சி மண்டல அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளது. இங்கு வருகின்ற மக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
நாய்கள் தொல்லை பொன்னுசெல்வம், தனியார் ஊழியர்: இப்பகுதியில் அதிக அளவில் தெரு நாய்கள் நடமாடுகின்றது. இதனால் இப்பகுதியில் உள்ள பள்ளி மாணவர்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். மாணவர்கள் செல்லும்போது விரட்டிக் கடிக்கிறது. எனவே நாய்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.